திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலா வருமா தங்கத்தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2018 11:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிப்பு பணிக்காக இரு ஆண்டுகளாக தங்கத்தேர் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கமிஷனர் அனுமதி வழங்கியும் கூட பணி துவங்காதது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோயிலில் 2007ல் தங்கத் தேர் செய்யப்பட்டது. தினமும் இரவு 7:00 மணிக்கு கோயில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி தங்கத் தேர் உலா வரும். தங்கத் தேர் இழுக்க பக்தர்கள் இரண்டாயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துகின்றனர். ஏராளமான பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு நாள் தங்கத்தேர் இழுக்க 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளனர்.
திருவிழா நாட்கள், சுவாமி மதுரைக்கு செல்லும் நாட்களில் தங்கத்தேர் புறப்பாடு இருக்காது.
இருஆண்டுகளாக உலா இல்லை இத்தேரிலுள்ள பொம்மைகள் சேதமடைந்தன. அவற்றை உபயதாரர்கள் மூலம் சீரமைக்க கமிஷனரிடம் அனுமதி கேட்டு கோயில் நிர்வாகம்கடிதம் அனுப்பியது. இதனால் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்பட்டது. தங்கத்தேர் அறையில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கமிஷனர் அனுமதி கிடைத்தது.
பிப்., 12 தங்கத்தேர் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று 23ல் வரை பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் துணை கமிஷனர் பணி மாற்றப்பட்டுள்ளார்.
பக்தர்கள் அதிருப்தி தங்கத்தேர் புறப்பாடுஇல்லாததால் நிரந்தர வைப்புத் தொகை செலுத்திய வர்கள் உட்பட பக்தர்கள் வேதனையில் உள்ளனர். இதனால் கோயிலுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., தங்கத் தேர் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து உலாவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.