முத்து ஆபரணங்களில் பொதுவாக கேப்பை அளவான சிறிய முத்துக்களும் பலாக்கொட்டை அளவான பெரிய முத்துக்களும் உண்டு. எழுந்தருளும் நாயகம், சோமாஸ்கந்தர் வடிவத்தின் நடுவில் இருக்கும் முருகன் ஆகிய இவர்களுக்குள்ள முத்தங்கி சிறிய முத்துக்களால் ஆனது. எழுந்தருளும் அம்மையின் கையிற் பிடித்திருக்கும் ஒற்றைக் கிளி பெரிய முத்துக்களால் ஆனது. ஆவணி மூலத் திருவிழாவில் நான்காம் நாள் புறப்பாட்டில் மீனாக்ஷி சுந்தரேசருக்கு அடி முதல் முடி வரை முன்னும் பின்னும் முத்து மாலை முத்தங்கி காட்சி தரச் செய்வது உண்டு. சித்திரைத் திருவிழா எட்டாவது நாளிலும் ஆவணி மூலத்திருவிழா ஏழாவது நாளிலும் முறையே அம்மனுக்கும் சுவாமிக்கும் நடக்கும் பட்டாபிஷேகத்தில் சாத்துவதற்கெனப் பட்டாபிஷேகக் கிரீடம் என்றொன்று இருக்கிறது. இது ஹம்பி அரசரான அப்பாஜி ராயர் என்பவர் செய்து வழங்கினார் எனச் சொல்லி வருகின்றனர். இது 134-8-0 தோலா எடை உடையது. 920 மாணிக்கமும் 78 பலச்ச வைரமும் 11 மரகதமும் 7 நீலமும் 8 கோமேதகமும் இதில் பதித்திருக்கின்றனர். முதலில் இரத்தினங்களை வரிசைப்படுத்தி அமைத்து பின் இரத்தினங்களின் இடைவெளியில் சொக்கத் தங்கத்தை சிறிது சிறிதாக உள்ளே செலுத்தி இறுகச் செய்து இதனை அமைத்து உள்ளனர். இதனைக் குந்தனக் கட்டிட வேலைப்பாடு எனப்படும். இவ்வேலைப்பாடு இன்று தமிழகத்திலும் ராஜஸ்தானத்திலும் நடைமுறையில் உள்ளன. அப்பட்டாபிஷேகத்தில் பட்டாபிஷேக கிரீடம் சாத்திய பின் திருமலை நாயக்க மன்னர் செய்து கொடுத்த இரத்தினச் செங்கோல் சுவாமி தன் கையில் தாங்கிக் காட்சியளிப்பார். இச்செங்கோலின் எடை 64-14-0 தோலா. இதில் 761 சிவப்பு கற்களும் 74 வைரூர்யங்களும் 21 பலச்ச வைரங்களும், 269 மரகதமும் 44 முத்துக்களும் பொருத்தப் பட்டுள்ளன. சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணத்தன்று மட்டும் மதுரை நாயகரு எழுந்தருளும் பெருமானுக்கு அழகான எடுப்பான வாசுமாலை கீரிடம் சாத்துவார்கள். முன்பக்கமும் பின்பக்கமும் முறையே மூன்று கீழ்மேல் வரிசையாக பெரிய மாணிக்கக் கற்கள் தரையிலிருந்து எடுத்தபடிக் அதாவது பட்டை தீட்டாமலே பதிக்கப்பட்டு இன்னும் அழகும் பொலிவும் பளபளப்பும் கொண்டு ஒளிவிடுவது வியப்பூட்டும். இதன் எடை 136-1-0 தோலா. இது 247 கெம்பு 439 முத்து 39 மரகதம் 300 பவளம் 27 பலச்ச வைரம் 6 நீலம், 2 கோமேதகம், 241 பவளம் பதித்துக்கட்டியது. இதனை பழைய பாண்டியர் காலத்தது என்கின்றனர்.
தலைப்பாகை கிரீடம்:
திருவிழாக்களின் புறப்பாட்டில் அம்மன், குதிரையில் எழுந்தருளி வரும்போது போர் வீரன் போல் தோற்றமளிக்கும்படி குதிரை வாகனத் தலைப்பாகைக் கிரீடம் எனவொன்று திருமலை நாயக்க மன்னர் அம்மனுக்குச் செய்து கொடுத்துள்ளார். போர் வீரர் மெல்லிய நீளமான மல்லுத்துணியால் தலையில் கிளிக்கட்டு கட்டுக்கட்டுவது போன்ற வடிவம் உள்ளது. மாணிக்கம், முத்து, பலச்ச வைரம், மரகதம் ஆகிய கற்களை அழகுறப் பதித்தமைத்த முத்து முகலாய கிரீடத்தை அம்மனுக்குச் சாத்துவார்கள். இதன் அமைப்பும் தோற்றமும் குதிரையேற்றத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். இதன் எடை 113-4-0 தோலா. 332 நன் முத்துக்களும் 474 சிவப்புக் கற்களும் 158 பலச்ச வைரமும் 27 மரகதமும் இதிற் பதித்துள்ளனர்.
திருமுடிச்சாத்து:
மேலும் திருமுடிச்சாத்து என்ற ஒருவகை கிரீடமும் திருமலை நாயக்கர் அரசர் செய்து கொடுத்துள்ளார். இதில் எழுந்தருளும் நாயகிக்கு அதாவது அம்மனுக்குச் சாத்தப்படும். பெண்கள் தங்கள் தலைமுடியை உச்சி எடாமல் அப்படியே பின்பக்கமாக வாரிச் சடையாகப் பின்னிப் போடுவது போன்ற அமைப்பில் இக்கிரீடம் அமைந்துள்ளது. இதன் எடை 83 தோலா. 324 கெம்பும், 116 பலச்ச வைரமும், 2 மரகதமும், 694 முத்துக்களும், 2 வைடூர்யமும் இக்கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள் »