ஆவணி மூல விழாவில் பிட்டுத்திருநாளில் சுவாமி வைகையைக் கரை அடைக்கக் கூலியாள் வடிவத்தில் புறப்பாடகிச் செல்லுவார். தலையில் சுமையடையும், கூடையும் தோளில் மண்வெட்டியும் சுவாமி தாங்கியிருப்பார். இவையெல்லாம் தங்கத்தால் ஆனவை. இக்கோலத்தில் சுவாமியைப் பார்த்தால் திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதியார் சொன்ன ""கரும்பனும் விரும்ப நின்ற கட்டளவும் கட்டுமட்டான திருமேனியும் தோன்றும். இவற்றுள் சுமையடையின் எடை 84-8-0 தோலா இதில் 76 சிறிய பெரிய வைரங்களும் 342 சிவப்பு கற்களும் 27 மரகதக்கற்களும் 158 பலச்ச வைரமும் 27 மரகத கற்களும் பொருத்தப்பட்டுள்ளன. கூடையின் எடை 25-10-0 தோலா. மண்வெட்டியின் எடை 19 தோலா. இம்மூன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலிலிருந்தே செய்யப்பெற்றன எனச்சொல்கின்றனர்.
பொட்டுக்காரை:
சிவகங்கையை ஆண்ட பவானி சங்கர் இராசா சேதுபதி காத்த தேவர் அவர்கள் அம்மனுக்குத் தங்கக் கொடியுடன் கூடிய விலை உயர்ந்த பட்டை தீட்டாத மாணிக்கக் கற்களை மரகதக் கற்கள் பதித்துச் செய்த பொட்டுக்காரை ஒன்று கொடுத்திருக்கிறார். தங்கக் கொடி ஏராளமான சிறுசிறு தங்க இழைகளால் உறுதியாகப் பின்னப்பட்டது. மேலும் அக்கொடி தங்கக் கம்பி போன்று மிக வன்மையாகவும் பின்னல் தெரியாமல் மொழு மொழுவெனவும் அவ்வாறு இருந்தாலும் தடவிப்பார்த்தால் நெழு நெழுவென வளைந்து flexible கொடுப்பதாகவும் உள்ளது. கட்டணங்கட்டி கோயில் நகைகளைப் பார்வையிடும் மேனாட்டவர்கள் கூட இவ்வருமையான அணிகல வேலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதன் எடை 53-7-2 தோலா. இதில் 331 சிறிய மாணிக்க கற்களும் 44 பெரிய மரகதக் கற்களும் பதித்துள்ளனர். இதே போன்று இராமநாதபுரத்தையாண்ட பாஸ்கர சேதுபதி மன்னரவர்கள் கோவிலில் உள்ள ஆக்ஞா சித்த மூர்த்திக்கு 39-4-0 தோலா எடையில் 277 சிவப்பு கற்களும் 38 பலச்ச வைரமும் 81 மரகத கற்களும் பதித்துச் செய்த பெரிய பதக்கம் ஒன்று தங்கக் கொடியில் சேர்த்து நன்கொடையாகக் கொடுத்துள்ளார். பதக்கத்தின் பின்புறத்தில் இதன் விளக்கமும் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது 1893 ஆம் ஆண்டு தந்தது.
பவளக் கொடி பதக்கம் :
அடுத்துக் குறிப்பிடத்தக்கது பவளக்கொடி பதக்கம். இது இயற்கைப் பவள வேரில் இருந்து கிளை கிளையாக பரந்து திரிந்து இருப்பதைப் போல் அமைந்துள்ளது. இந்தப் பவளம் நன்றாக விளைந்து முதிர்ந்த பவளம். இதனால் இது களங்கமற்ற பளபளப்பான சிவப்பு நிறத்தில் அழகாகத் தோற்றமளிக்கிறது. ஒரு பதக்கமாக அணிவதற்கு ஏற்றவாறு கிளைகளின் நுணியை ஒட்டி இரத்தினம் பதித்த ஒரு வளையம் பொருத்தப்பட்டு இது திகழ்கிறது. இதன் எடை 11-5-0 தோலா 64 மாணிக்க கற்களும், 25 முத்துக்களும் இதன் வளையத்தில் பதிக்கப்பெற்றுள்ளன.
இப்பதக்கமேயல்லாமல் பவளத்தாழ்வடமொன்பதொன்றும் கோயிலில் உள்ளது. இது கருநாடக நாட்டை ஆண்டுவந்த திப்பு சுல்தானுக்கு அமைச்சராக திவான் பணிபுரிந்த பூர்ணையா என்பவரால் மீனாக்ஷி யம்மனுக்குக் கொடுக்கப்பெற்றுள்ளது. பெரிய உருண்டை வடிவத்தில் முதிர்ந்து விளைந்த பளபளப்பும் சிவப்பு நிறமும் கொண்ட 28 பவள மணிகளை 27 தங்கக் குண்டுமணிகளுக்கு இடையிடையே வைத்து அமைத்தது. இதன் மொத்த எடை 43-8-0 தோலா.
வாகனப்பதக்கங்கள்:
வேறு இரண்டு பெரிய பதக்கங்களும் இக்கோயிலில் உள்ளன. இவையிரண்டும் நிடத நாடண்ட நளச்சக்கரவர்த்தி கொடுத்தவை எனக் கோயிலில் வழிவழியாகப் பூசை செய்து வரும் குருக்கன்மார்களும் கருவூலப் பொறுப்பாளர்களும் செவிவழிச் செய்தியாய் சொல்லி வருகிறார்கள். உலகம் இன்று நேற்று தோன்றினது அன்றன்றும், சிவநெறி தொன்மையானதென்றும், மதுரையும் நம் பெரிய கோயிலும் ஊழிதோர் உள்ளவை என்றும் வழங்குவது உண்மை எனக் கொள்பவர் இப்பதக்கங்கள் பற்றி ஐயம் கொள்ளார். இப்பதக்கங்கள் இரண்டும் பொன்னால் ஆனவை. பொன்னென்பது தங்கமும் வெள்ளியும் கலந்த கலப்பு பழைய ஆபரணங்கள் எல்லாமுமே பொன்னாலனவை தாம். இவை இரண்டும் முறையே எடை 69-14-0 தோலாவும், 45-12-0 தோலாவும் உள்ளவை. ஒன்றில் பட்டை தீட்டாத 79 பெரிய மாணிக்கக் கற்களும் 18 நீலமும் 8 மரகதமும், 6 வைடூர்யமும், 4 கோமேதகமும், பதித்துள்ளனர். மற்றொன்றில் பட்டை தீட்டாத 83 மாணிக்கக்கற்களும் 12 நீளமும் 6 வைடூர்யமும், 7 மரகதமும், 3 கோமேதகமும் பதித்துள்ளனர். இவையிரண்டுமே குந்தனக் கட்டிட வேலைப்பாட்டில் அமைந்தவை. இப்பதக்கங்களை வாகனப் பதக்கங்கள் என்று கருவூலப் பேரேட்டில் குறித்துள்ளார். திருவிழாக்களில் உயரமான குதிரை, யானை, கற்பக மரம், பூதம், யாழி, நந்தி தேவர், ஆகிய வாகனங்களில் சுவாமியை எழுந்தருளப் பண்ணித்திருவீதியை வலம் வரும்போது இப்பதக்கங்கள் மக்களுக்கு மிக நன்றாகத் தெரியும் அதனாலயே இவை வாகனப்பதக்கங்கள் எனப் பெயர் கொண்டன.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள் »