பதிவு செய்த நாள்
25
செப்
2018
11:09
வத்திராயிருப்பு:சதுரகிரி மலைப்பாதையில் பக்தர்களுக்கு கழிப்பறைகள், ஓய்வு அறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் வனத்துறை, அறநிலையத் துறை யினருக்கு அறிவுறுத்திச் சென்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நீதிபதிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் சதுரகிரி மலை யிலும் மதுரை மாவட்ட போதை தடுப்பு குற்றவியல் நீதிமன்ற சிறப்பு நீதிபதி பத்பநாபன் தலைமையில் பேரையூர் சார்பு நீதிபதி சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அடிவாரத்தில் வனத்துறையினர் முகாமில் நடந்த ஆய்வில் பக்தர்களிடம் நடத்தப்படும் சோதனை மற்றும் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். தனியார் வாகன காப்பகங்களில் வசூலிக்கப்படும் தொகைகள், மலைப்பாதையிலும், கோயில் வளாகத்திலும் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர். கோரக்கர் குகை, கருப்பசாமி கோயில் அருகே பக்தர்களுக்கு வைக்கப் பட்டுள்ள குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீரை குடித்துப் பார்த்து சோதனையிட்டனர்.
மலைப்பாதையில் ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மலையில் இரவு தங்கும் பக்தர்களுக்கான தங்குமிடங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும்போது மழை, வெயிலுக்கு ஒதுங்கும் வகை யிலும், வனவிலங்குகள் குறுக்கிட்டால் அதிலிருந்து தாங்களை காத்துக்கொள்வதற்கு வசதியாக 5 இடங்களில் தற்காப்பு அறைகள் கட்ட வனச்சரகர் பொன்னுச்சாமியிடமும், மற்ற இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த கோயில் நிர்வாகத்தினரிடமும் அறிவுறுத்தினர். பவுர்ணமி வழிபாட்டிற்காக மலையேறிச் சென்ற பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
விருதுநகர்: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று (செப்., 24ல்) இரவு 7:00 மணிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சம்பத்குமார் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின், கோயிலில் பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் மேம்படுத்திடவும், வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
கோயிலுக்குள் இருந்த பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அருப்புக்கோட்டை: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, அருப்புக்கோட்டை சொக்கலிங்க புரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், நேற்று (செப்.,24ல்) மாலை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சம்பத்குமார், அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி வசித்குமார் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின், கோயிலில் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும், செக்யூரிட்டி பணியிடம் நிரப்படாமல் இருப்பதாகவும், கோயில் சமையலறை சுகாதார மற்றதாக இருப்பதாகவும், குடிநீர் வசதி இல்லை, சிலைகள் உள்ள அறை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் அறிவுறுத்தினார்.
மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று கோயில் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
கோயில் தெப்பகுளத்திற்கு மழைநீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் கோயிலுக்குள் இருந்த பக்தர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்தார். முன்னதாக, அருப்புக்கோட்டை சப் ஜெயிலில் ஆய்வு செய்து விட்டு வந்தார். தாதன்குளம் பிள்ளையார் கோயிலும் ஆய்வு பணி மேற்கொண்டார்.