பதிவு செய்த நாள்
28
செப்
2018
01:09
அஃது இன்றைய மதுரையா?
திரும கட்குஒரு தாமரைக் கூடமோ : திருமால்
மரும கட்குவெண் தாமரை மாடமோ : ஞாலம்
தரும கட்குயோ கத்தனிப் பீடமே : தரையாம்
பெரும கட்குஅணி திலகமே ஆனது இப் பேரூர்
பரஞ்சோதியார்
இவ்வாறு மதுரைச் சிறப்பினை பரஞ்சோதியார் கூறுகிறார். இத்தனைச் சிறப்புகளையும் கொண்ட மதுரையானது தன்னாற் தமிழ்புரக்கும் தன் பாண்டியநாட்டில் தலைநகராய் இருந்தது இதன் வரலாறே தமிழன் வரலாறு. நமது சமயத்தின் வரலாறும் கூட. இறைவனும் அகத்தியனும் பயின்ற தமிழை மதுரை வளர்த்தது எனக் கூறுவது மதுரை வரலாற்று உண்மை. தென்மதுரையைக் கடல் கொண்டது என்றும் அதன்பின்னே தென்மதுரை அமைந்து வளர்ந்தது என்றும் இறையனார் களவியலுரையும், சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையும் உரைக்கின்றனர்.
மதுரையில் தலைநகராகக் கொண்டு பண்டைய நாளில் பாண்டியர் ஆண்டனர். பண்டையர் என்ற சொல் யாது? அச்சொல்லில் இருந்தே பாண்டியர் என்பது பிறந்ததாகும் எனும்போது மதுரை என்ற சொல்லும் பெயர் எவ்வாறு தோன்றியது மருத நிலங்களால் சூழப்பெற்ற ஊர் மதுரை எனவாகியதோ! இறைவன் அமுத கிரணங்களை தெளித்துப் புனிதப்படுத்தினால் இவ்வூர் மதுரை என்று விளங்கியது என்பது புராணம் கூறும் செய்தி. மதுரம் செறிந்து நிலைத்த ஊர் மதுரையாகும். அன்னைக்கு மதுரம் பழகிய அழகிய சொல்லி எனப்பெயரும் உண்டு. மது என்ற சொல் இனிமையும், எளிமையும் குறிக்கிறது. மதுரையும் தமிழும் பிரிக்க முடியாததாகும். உயர்மதிக்கூடலின் ஆய்ந்த ஒன் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைக்குழல் புக்கோ! என்ற திருக்கோவையாரின் வரிகள் மதுரை மாநகரில் தமிழ் ஆயப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.
முத்தமிழ் துறையின் முறை பேசிய உத்தமக் கவிஞர்களுக்கு மதுரையில் என்றுமே தட்டில்லை. பத்துப்பாட்டிற்கு முந்தைய நூலாக கருதப்படுகிற செங்கோல் தரைச்செலவு என்ற நூலின் நிலந்தரு திருவிற்பாண்டியனின் தலைநகர் மதுரை என்றும் அங்குத்தமிழகம் நிறுவியிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினேன் காண் அப்பர் தேவாரம். கடவுளர்களே தமிழின் பால் உள்ள வேட்கையால் மதுரைக்கு எழுந்தருளினார்கள் என்று கூற்றுணர்வு எழுந்த வேட்கையால் எனில் இக் கொழி தமிழ் பெருமையை யார் அறிவார்கள். என்று குமரகுருபர அடிகள் பாடுகிறார். திருவிளையாடற் புராணம் தமிழ்ச்சங்கம் மதுரையில் இருந்ததை உறுதிப்படுத்ததுகிறது. எனவே மதுரையும் தமிழும் இணைந்த ஒன்று என்பது ஐயத்திற்கப்பாற்பட்டது.
மதுரைக்குப் பல பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. விழாமலிமூதூர், கம்பலை மூதூர், ஆலவாயில், ஆலவாய், கடம்பவனம், கன்னிபுரம், கூடல், நான்மாடக்கூடல், பூலோக சிவலோகம், சிவபுரம் என்பன அவற்றுள் சில. அவற்றுள் ஆலவாயில் என்பது இலக்கியங்களில் காணப்படாத காரணம். அஃது புராணப்பெயராய் இருப்பதும் ஆகுமோ.... ஆலக்கோயில் என்று நாவுக்கரசர் தேவாரம் குறிக்கிறது. ஆலமரத்து நீழலில் இறைவன் எழுந்தருளியதால் ஆலக்கோயில் மருவி ஆலவாய் ஆயிற்றோ....... எனவும் கருத இடமுண்டு ""மாடம் மடி மருகிற் கூடல் என்பது நெடுல்வாடை. ""மாட மலி மருகிற் கூடலான் கண் என்பது அக நானூறு.
"நான்மாடக் கூடல் நகர் என்பது பரிபாடல்
மடுவார் தென்மதுரை நகர் ஆலவாயில்
மறிகூடல் சூழ் புலன்வாயில் மாட நீடு
குடவாயில் குணவாயில் ஆனதெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடாவன்றே
திருநாவுக்கரசர் தேவாரம்
அருளும், பொருளும், புலமையும் நிறைந்த காரணத்தினால் இம்மாமதுரை மீதமுள்ள உலகை காட்டிலும் பெருமை பெற்றது என்று பரிபாடல் கூறுகிறது.
"உலகம் ஒருநிறைத் தானோர் நிறையாப்
புலவர் புலக்கோளால் தூக்க உலகனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான் மாடக்கூடல் நகர்
பரிபாடல் 6 ஆம் பாடல்
சேரர்களின் வஞ்சியும் சோழரின் புகாரும் போல் அழிந்துபடாமல் இன்றும் நிமிர்ந்து நிற்பது மதுரையின் மற்றுமொரு சிறப்பு. இது தமிழகத்தின் பெரும்பேறு. வஞ்சியும் புகாரும் இன்று சிற்றூர்களாகச் சிதைந்து விட்டன. வஞ்சியின் இருப்பிடம் ஆராய்ச்சியில் உள்ளது. வஞ்சியிலும், மற்ற நகரங்களிலும் உள்ள மக்கள் சேவல் கூவியே எழுந்தனர். எனினும் இம் மதுரை மக்கள் நான்மறைக் கேள்வி நவின் குரல் எழுப்ப ஏவ விண்றுயில் எழுந்தெனாலம்.
"கோதி லாதசெஞ் கூற்றுடை வாரணம் கூவ
ஓத ஞாலத்து மற்றய தலத்துளார் விழிப்பர்
ஈத லேற்றலோ டருதொழி லிரு பிறப்பாடல்
வேத நாதத்தின் விழிப்பரிவ் வினையகர் மாக்கள்
திரு ஆப்பனூர் புராணம்
பாண்டியர்க்கு பின்பு, நாயக்க மன்னர்கள் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு கி.பி. 14 முதல் கி.பி 18 ஆம் நூற்றாண்டு வரை அரசாண்டனர். அவர்கள் காலத்தில் அவர்கள் மதுரையும் அங்கயற்கண்ணி ஆலயமும் பலவற்றாலும் வளர்ந்திருக்கின்றன. இது பற்றி மதுரை நாயக்கர் வரலாறு மற்றும் திருமலை மன்னர் பெருமையில் கூறப்பட்டுள்ளது. கீழ ஆவணி மூல வீதியில் அன்று பழைய நாயக்கர் காலத்தில் அரசப் பிரதிநிதிகள் தங்குமிடமாக இருந்துள்ளது. தற்போது மாற்கட்டாய் இருந்து அஃதும் அங்கிருந்து மாற்றப்பட்டு மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் அருகில் மாற்றப்பட்டு வருகிறது.
திருக்கோயிலுக்கு பக்கத்தில் உள்ள மாவட்ட காவல் நிலைய அலுவலகங்கள் உள்ள இடம், பழைய நாயக்கர் காலத்திய கட்டிடப் பாணியில் உள்ளது. விட்ட வாயில் உள்ள பழம்பெரும் வாயிலும், மாநகராட்சிக் பழைய கட்டிடமும் பழம் சின்னங்களாகும். அன்றும் இன்றும் அங்கயற்கண்ணி திருக்கோயில் நடுநாயகமாக அமைந்துள்ளது. வானுயிர்ந்து விளங்கும் வண்ணக் கோபுரங்கள் இக்கோயில் மாநகருக்கு பெருமையளிக்கிறது. கோயிலைச் சுற்றிய பெரும் திருமதிலும், திருச்சுற்றுகளும், சொக்நாதர் திருமுன்பும் எழில் மண்டபங்களும், கண்ணுக்கும் கருத்துக்கும், பிரம்மாண்டம் என விருந்தளிக்கின்ற. மதுரைக்கோயில் கலைப் பொக்கிஷம் மலிந்து மூலபண்டாரம். மக்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கின்றது. இன்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும், குழந்தைகளும் வழிபாட்டுப்பொருளை கையேந்தி அம்மையையும் அப்பனையும் முறையோடு வழிபட்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த நிலை அன்றும் மிக மிக அதிகமாக இருந்தது எனக் கூறுகின்றனர் வயது முதிர்ந்தோர்.
"தூடக மங்கை மடந்தை மார்கள்
துணைவரோடும் தொழுதேத்தி வாழ்த்த
ஆடகமாட நெருங்குகூடல் ஆலவாயில்
சம்பந்தர், தேவாரம்
""திண் கதிர் மதரணி யோண்குறு மாக்களை
ஊம்பினாத் தழீத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போது பிடித் தாங்குத
தாங்கு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
கூவினர் புகையினர் தொழுதனர் பழிச்சிச்
சிறந்து புறம் காக்கும்
மதுரை காஞ்சி வரலாறும் புராணமும் பேசுகின்ற மதுரைதான் இன்றைய மதுரையோ என்பது ஆராய்ச்சிக்குரியது. பாண்டியரின் தலைநகராகிய மதுரை திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கேயிரந்ததாக ""மாட மலிமருகில் கூடற் குடவயின் என்ற திருமுருகாற்றுப்படை வரி தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடற்குடவயில் பரங்குன்று என்பது நக்கீரர் வாழ்த்து. ஆகவே மதுரை பரங்குன்றின் கிழக்கே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய மதுரை திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கில் இல்லை.
"வைகையின் வடகரையின் மருவிய ஏடகத்தய்யனை சம்பந்தர் தேவாரம் திருவேடகத்தினை கூறுகின்றது. ஆனால் இன்று ஏடகம் வைகை வடகரையில் இல்லை. இடக்கரையில் இருக்கின்றது. வைகையின் வழி மாற்றமும் மதுரையின் திசைமாற்றமும் ஆராய்ச்சியாளருக்கு நல்விருந்து கோவலன் கொலையுண்ட இடம் பழங்காநத்தம் என்ற இடத்தில் இப்போதைய டி.வி. எஸ் நகர் துவங்கும் இடத்தில் கோவலன் பொட்டல் என்ற இன்றும் வழங்கி வருகின்றது. கோயில் இருந்த இடம் ஆலவாய் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவைகளில் இருந்து மதுரை நகரமும் அங்கயற்கண்ணி ஆலயமும் தனித்தனியே இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இன்றைய மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தை மையமாகக் கொண்டு நகரமைப்பு களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. இந்த அமைப்பு பரிபாடல் காலத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையும் சீரூர் பூவின் இதழகத்
தனைய தெருவம். இதழகத்
தரும் பொகுட்டனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அணையர் தண்டமிழ்க் குடிகள்
தாதும் பறவை அனையர். . .பரிசில்வாழ்நகர்
பரிபாடல் திரட்டு ஏழாம் பாடல்
இப்பாடல் மதுரையித்த திருமாலின் கொப்பூமில் மலர்ந்த தாமரையாகவும், நகரத் தெருக்களை அத் தாமரையின் இதழ்களாகவும் தெருக்களின் நடுவேயமைந்த சொக்கரின் திருக்கோயிலினை அவ்விதழ்களின் நடுவில் உள்ள காயாகவும் காட்டுகிறது. இதில் அண்ணல் என்று சோம சுந்தரரைக் குறிப்பிட்டிருப்பதும் அங்கயற் கண்ணியை குறிப்பிடாததும், ஆய்ந்து உணரத்தக்கது. நாகரீகத்தின் தொட்டில்கள் என்ற வரலாற்று ஆசிரியர்கள் புகழ்ந்து பேசும் பலநகரங்கள் இன்று பொய்யாப் பழங்கதையாய் வரலாற்று ஏடுகளில்தான் இருக்கின்றன. இம்மதுரை அன்று தொட்டு இன்றுவரை உயிர்ப்புள்ள தலைநகராய்ச் செல்வமளித் திருநகராய்ச் சமயத்தின் ஊற்றாய் விளங்குகிறது. தமிழகக் கோயில்கûளில் எல்லாம் இன்றும் மிகுந்த உயிர்ப்புள்ள கோயிலாக most loving temple விளங்குவது அங்கயற்கண்ணி ஆலயமே.