பதிவு செய்த நாள்
07
பிப்
2012
01:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பால் உட்பட திரவிய அபிஷேகங்கள் நடந்தன. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமிக்கு உச்சிகால பூஜைகள் முடிந்து, அபிஷேகம், பூஜை பொருட்கள் பழனி ஆண்டவர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள சித்தி விநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முத்துக்குமார சுவாமி, வீரபாகு, இடும்பன், கடம்பனுக்கு பூஜைகள் முடிந்து, மூலவர் பழனி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் முத்துக்குமார சுவாமி, தெய்வானை பல்லக்கில் தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா சென்றனர். இரு சுவாமிகளும் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒருமுறை தைப்பூசத்தன்று மட்டுமே.
கிரிவலம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் பவுர்ணமி கிரிவலம் இன்று(பிப்.7)நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோயில் வளாக சஷ்டி மண்டபத்தில் இருந்து கிரிவலம் புறப்பாடாகும், என கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் தெரிவித்தார்.