பதிவு செய்த நாள்
13
அக்
2018
04:10
பழநி: நம்ம ஊர் காவல் தெய்வங்களாக தொன்று தொட்டு கருப்பணசுவாமி, அய்யனார் காளியம்மன், முனீஸ்வரர், சுடலை மாடசாமி மதுரைவீரன், காத்தவராயன், இடும்பன், ஒண்டிவீரன் போன்ற சாமிகள் உள்ளன.
ஒவ்வொரு ஊர், குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வமாக இந்தச் சாமிகள் உள்ளன. எல்லையை காக்கும் காவல் தெய்வமாகவும் இந்தச் சாமிகளை நாம் போற்றி வணங்கி திருவிழா எடுத்து கொண்டாடுகிறோம்.
அந்த வரிசையில் பழநி அருகே கொடைக்கானல் ரோடு தேக்கம் தோட்டம் பகுதியில் உள்ள காவல் தெய்வம் எல்லை கருப்பணசாமி. பெயரை பார்த்தாலே காவல் தெய்வம் என்பது புரியும். இதனால் ஊருக்குள் நுழைவோரும், வெளியேறுவோரும், இந்தக் காவல் தெய்வத்தை
வணங்காமல் செல்வதில்லை. அப்பகுதி கிராமத்தினர்தான் என்றில்லை அவ்வழியாக செல்லும் வெளியூர்க்காரர்களும் காவல் தெய்வத்தை கண்டு வணங்கியே செல்கின்றனர்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகன ஒட்டிகள் மலைப்பாதையில் செல்வதால், விபரீதம், விபத்துகளில் இருந்து தங்களை காக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர். வழிப்பாதையில் பாதுகாப்பதால், பழநி டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கருப்பண சுவாமிக்கு பொங்கல், வைத்துகிடா வெட்டி பூஜை செய்கின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 12:30 மணிக்கு சிறப்பு பூஜையில் பூஜாரி கணேசன், ஆணிபாதம் மீது ஏறிநின்று சாமியாடியபடி குறிசொல்கிறார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
கோயில் பூஜாரி தகவலாக (குறியல்ல) கூறியது: விலங்கடியான் காவல் தெய்வம் எல்லை கருப்பணசுவாமி கோயில் நூறு ஆண்டுக்குமேல் பழமை வாய்ந்தது. 1994ல் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோயில் நடைதிறந் திருக்கும். புதிதாக வாகனங்கள் வாங்குவோர் இங்கு வந்து பூஜை செய்கின்றனர்.அமாவாசை நாளில் நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. வாகன யோகம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு வேண்டி கருப்பணசுாவமிக்கு மதுபாட்டில், சுருட்டு, கோழி, கிடாவெட்டி என நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். மேலும் விவரங்களுக்கு: 80124 25828ல் பேசலாம்.