பதிவு செய்த நாள்
19
அக்
2018
03:10
திருநெல்வேலி, தாமிரபரணி மகா புஷ்கர விழா நடக்கும் வேளையில், இந்நதிக்கரையில் ராமாயண நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள ஜடாயு தீர்த்தம், படித்துறை மற்றும் கோவில், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது வரை, ஒரு லட்சம் பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்தனர்.தாமிரபரணியில் உள்ள, 64 தீர்த்த கட்டங்களில், ராமர் தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், சிவதீர்த்தம் முக்கியத்துவம் வாய்ந்தவைஆகும். இதில், ராமாயண நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில், நெல்லை அருகே அருகன்குளத்தில் அமைந்துள்ள ஜடாயு தீர்த்தம், படித்துறை மற்றும் கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.இங்கு, மகா புஷ்கர விழா, 144 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நினைவு கூரும் வகையில், 144 அடி நீள படித்துறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் ரூபாய் செலவில், தனிநபர் ஒருவர் அர்ப்பணித்துள்ளார்.உருவான வரலாறுராமன் வனவாசத்தின் போது, ராவணன் சீதையை துாக்கி செல்கிறான். சீதையை மீட்க, ஜடாயு என்ற கழுகு, ராவணனுடன் சண்டை போட்டது. அப்போது ராவணன், ஜடாயுவின் இறக்கைகளை வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.பின் ராமன், சீதையை தேடி வரும்போது, ஜடாயு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. சீதையை, ராவணன் கடத்தி சென்றதை ஜடாயு, ராமனிடம் சொல்லியது. அப்போது, ராமன் ஸ்ரீலட்சுமி நாராயணராக, ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தார்.ஜடாயுவின் ஈமகிரியை செய்வதற்காக, காசி தீர்த்தம் உருவாக்கப்படுகிறது. இது, ஜடாயு தீர்த்தம் எனவும், காசி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. தவிர ராம தீர்த்தம், சிவ தீர்த்தமும் உருவாக்கப்பட்டுஉள்ளது.ஜடாயுவிற்கு, ராமர் திலதர்ப்பணம் அளித்து, மோட்சம் கொடுத்த இடம், ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ராமனின் தந்தை தசரதருக்கு கூட, கிடைக்காத திலதர்ப்பணம் ஜடாயுவிற்கு கிடைக்கிறது.ஜடாயு தீர்த்தம் ஸ்ரீலட்சுமி நாராயணருக்காகவும், ராம தீர்த்தம் ராமருக்காகவும், சிவதீர்த்தம் திலதர்ப்பணம் செய்வதற்காகவும், உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீலட்சுமி நாராயணர், ஜடாயுவிற்கு கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.இங்குள்ள ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்த குண்டங்களில் உள்ள நீர், தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கும் இடம், ஜடாயு படித்துறை என அழைக்கப் படுகிறது. ஒரு லட்சம் பக்தர்கள்இந்த படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழா துவங்கி, எட்டு நாட்களில், ஒரு லட்சம் பக்தர்கள் நீராடி சென்றுள்ளனர். ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு பெரும்திரளாக பக்தர்கள் வரக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரதி தமிழ் மாத பிறப்பு, அமாவாசை தினங்கள் மற்றும் ஆடி, தை, மஹாளய அமாவாசையில் இங்குள்ள படித்துறையில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாகும்.