பதிவு செய்த நாள்
26
அக்
2018
12:10
சென்னை: தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவுக்காக இயக்கப்பட்ட, சிறப்பு ரயில்கள் வாயிலாக, 12 நாட்களில், 3.63 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபணி மகாபுஷ்கர விழா, அக்., 11 முதல், 23ம் தேதி வரை நடந்தது.
இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க, சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு, 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.இந்த ரயில்களில், 31 ஆயிரத்து, 103 முன்பதிவு பயணியர் பயணம் செய்தனர். இதனால், 2.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், மகா புஷ்க ரத்தில் பங்கேற்கும், அதிகமான பக்தர்களை கையாள, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், கூடுதலாக மூன்று பயணச்சீட்டு மற்றும் விசாரணை மையம், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டது. இந்த மையங்கள், 1.82 லட்சம் முன்பதிவில்லாத பணியரை கையாண்டு, 1.07 கோடி ரூபாய்வருவாய் ஈட்டியுள்ளன.இதன்படி, திருநெல்வேலி பகுதியை, 2017 இதே காலத்துடன் ஒப்பிடுகையில், பயணியர் எண்ணிக்கை, 68 சதவீதமும், வருவாய் அளவு, 97 சதவீதமும் அதிகரித்து உள்ளது.இந்த காலகட்டத்தில், பயணச்சீட்டு இன்றி, பயணம் செய்த, 620நபரிடமிருந்து, 3 லட்சம்ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.மஹா புஷ்கரம் விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில், 23 லட்சம் பேர் புனித நீராடினர்.அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்து உள்ளார். மஹா புஷ்கரம் விழாவில், காணாமல் போன, 17 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கு மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத் துள்ளனர்.