பதிவு செய்த நாள்
27
அக்
2018
10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (அக்.28) புதிய தீர்த்த கிணறுகள் பிரதிஷ்டை செய்ய உள்ளதால் இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது. ஜோதிர்லிங்க தலங்கள் 12ல் தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இதனால் விழா, விடுமுறை நாளில் கோயிலில் நீராட பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் குறுகலான பாதையில் அமைந்துள்ள 2 முதல் 6 வரையிலான தீர்த்த கிணறுகளை கோயில் நிர்வாகம் மூடியது. இதனால் பக்தர்கள் 22 தீர்த்தங்களிலும் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில், பக்தருக்கு இடையூறாக உள்ள தீர்த்த கிணறுகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி 30 லட்சம் ரூபாய் செலவில் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் புதியதாக 6 தீர்த்த கிணறுகள் (மகாலெட்சுமி, சரஸ்வதி, கங்கா, யமுனா, சங்கு, சக்கரம் தீர்த்தம்) அமைக்கும் பணி முடிந்தது. இப்புதிய தீர்த்தங்களை பக்தர்கள் பயன்படுத்துவதற்காக இன்று(அக்.,27) காலை 8:00 மணிக்கு கோயில் கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜையும், மாலை 4:00 மணிக்கு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் 6 குண்டத்தில் முதல்கால யாகசால பூஜையும், அக்.,28ல் 2ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9:00 முதல் 9:30 மணிக்குள் 51 கலசத்தில் உள்ள தீர்த்த நீரை 6 புதிய தீர்த்த கிணற்றில் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்படும், என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.