பதிவு செய்த நாள்
27
அக்
2018
10:10
திருப்பூர்: காங்கயம், சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் மூன்று அரிவாள் வைக்கப்பட்டன. இதனால், விவசாயம் செழிக்கும்; உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நாட்டில், ஏற்படும் மகிழ்ச்சி அல்லது இன்னல் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு குறித்து உணர்த்தும் வகையில், ஏதேனும் ஒரு பொருள் வைத்து வழிபாடு நடக்கும். சிவன்மலை ஆண்டவர், யாராவது ஒரு பக்தரின் கனவில் தோன்றி, குறிப்பால் உணர்த்தும் பொருள் இந்த பெட்டியில் வைக்கப்படும். அவ்வகையில், நேற்று இந்த உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் மூன்று அரிவாள் வைத்து பூஜை நடந்தது. குண்டடம், விசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி, 80 என்ற பக்தரின் கனவில் இது உத்தரவானது.
சிவன்மலை கோவில் சிவாச்சார்யார்கள் கூறுகையில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைக்கப்பட்டுள்ளது.மூன்றாண்டுகளுக்கு பின் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால், விவசாயம் செழிக்கும். உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, என்றனர்.