பதிவு செய்த நாள்
14
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று (நவ. 14) காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இக்கோயிலில் நவ., 8 முதல் நடந்த யாகசாலை பூஜை நேற்று பூர்த்தி செய்யப்பட்டு புனித நீர் மூலம் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சண்முகார்ச்சனை, உச்சிகாலை பூஜை முடிந்து, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடந்தது. சூரபத்மன் முன்செல்ல, வீரபாகு தேவர் விரட்டி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சார்யார் வாள் கொண்டு செல்ல, அவர்களைத் தொடர்ந்து சுவாமி வேலுடன் சூரனை எட்டு திக்குகளிலும் விரட்டிச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. யானைமுகம், சிங்கமுகம், ஆட்டுத்தலை உட்பட பல்வேறு உருவங்களில் சூரன் மாறி மாறி செல்ல இறுதியில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை விரட்டி சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின் சொக்கநாதர் கோயில் முன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றி, தீபாராதனை முடிந்து, பூ சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும்.