தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் முருகனின் நான்காவது படைவீடான சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்திருத்தலம் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 7-ம் தேதி காலை சண்முகசுவாமி நவவீரர்கள், பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினர்.
விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதிவுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாரதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பட்டு அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (14-ம்தேதி) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதே போல் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலிலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.