பதிவு செய்த நாள்
14
நவ
2018
04:11
தேனி: தேனிமாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (நவம்., 13ல்) மாலை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தேனி -பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என். ஆர்.டி. நகர் கணேச கந்த பெருமாள் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நவ. 8ல் துவங்கியது. நேற்று (நவம்., 13ல்) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
மாலையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி சம்ஹாரம் செய்தார். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக ஆறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் அதனை முடித்தனர்.
கணேச கந்தபெருமாள் கோயில் அர்ச்சகர் சரவணன் கூறியதாவது: திருச்செந்தூரில் உள்ள முருகனை போல ஆறுமுகனுக்கு, அலங்காரம் செய்யப்பட்டு, ஒவ்வொரு முகத்திற்கும் அர்ச்சனை, ஆராதனை நடந்தது. இந்தாண்டு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
* கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. கோயில் முன்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடத்தை சுமந்து புறப்பட்டு வேலப்பர் கோயில் வீதி, மெயின் ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்திஜி வீதி வழியாக மீண்டும் கோயிலை அடைந்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஊற்றி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
* போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அம்மனிடமிருந்து முருகன் சூரசம்ஹாரத் திற்காக வேல் வாங்கினார். மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
காமராஜ் பஜார், தேரடி தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி நகர் வலம் வந்தார். அலங்காரங்களை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இன்று (நவம்., 14ல்) காலை 9:00 மணிக்கு மேல் தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை தக்கார் அண்ணாத்துரை மற்றும் முருகன் கந்தசஷ்டி திருக்கல்யாண அன்னாதான அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
* பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜை களுக்குப்பின் அதன் வளாகம், திருவள்ளுவர் சிலை அருகே, மகாத்மாகாந்தி சிலை அருகே மற்றும் பெருமாள் கோயில் அருகே ஆகிய 4 இடங்களில் சம்ஹாரம் நடந்தது.
உற்சவர் பாலசுப்பிரமணியர், சூரனை வேலால் தலை கொய்து வதம் செய்வதை அர்ச்சகர் கார்த்திக் செய்து காண்பித்தார். தொடர்ந்து உற்சவரை சாந்தப்படுத்தும் அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் வராகநதியில் நீராடி சஷ்டி விரதத்தை கோயில் வளாகத்தில் நிறைவு செய்தனர். இன்று (நவம்., 14ல்) சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து கல்யாணம் விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அண்ணாதுரை, திருப்பணிக்குழுவினர்கள் எல். சசிதரன், பி.சி. சிதம்பரசூரியவேலு மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
கூடலூர்: கூடல் சுந்தர வேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா ஆறாம் நாளையொட்டி நூற்றுக் கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்த இவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுந்தவேலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில் சக்தி வேல் வாங்குதல், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று (நவம்., 14ல்) காலையில் கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம், மாலையில் மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.