பதிவு செய்த நாள்
15
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது. இன்று (நவ., 15) கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு சுப்பிர மணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருளினார்.
நவ., 8 முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன் தேர் நிலை நிறுத்தப்பட்டது. கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதம் முடித்தனர். பாவாடை நைவேதனம்: மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியில் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன்மீது காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது. இரவு வீதி உலாவில் சுவாமி அருள் பாலித்தார். கார்த்திகை வாஸ்து சாந்தி பூஜை நேற்று மாலை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளிய விநாயகர் முன் கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூஜை நடந்தது. யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.