பதிவு செய்த நாள்
21
நவ
2018
04:11
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கவும், ஆந்திராவின் வறட்சி மாவட்டங்களில் விவசாயத்தை பெருக்கும் வகையில் தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கிருஷ்ணா நதி நீரை கால்வாய் மூலம் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்ல ஆந்திர அரசு முடிவு செய்தது.கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டின் ஒரு பகுதியில் உள்ள போத்திரெட்டுபாடு என்ற இடமும், கடப்பா அருகில் உள்ள சோமசீலா அணையும் பிரமாண்ட கால்வாய் மூலம் இணைக்கப் பட்டன. ஆந்திர மாநிலத்துடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., என்ற அளவில் கிருஷ்ணா நீர் பெற முடிவானது.இதற்காக, சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வரும் கிருஷ்ணா நீரை, அங்கிருந்து 164 கி.மீ., தூரத்தில் உள்ள ஊத்துக் கோட்டையில் உள்ள "ஜீரோ பாயின்ட் வரை கால்வாய் அமைத்து கொண்டு வந்து, பின், 17 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக் கோட்டை வரை அமைக்கப்பட்ட கால்வாயின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப் பட்ட கிருஷ்ணா நீரில் பல லட்சம் லிட்டர் வீணானது.கிருஷ்ணா நீர் வரும் கால்வாய் பராமரிக்கப் பட்டால் மட்டுமே சென்னைக்கு சீரான குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை மூலம் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. கண்டலேறு முதல் ஊத்துக்கோட்டை வரையிலான கால்வாயை 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.மண் அரிப்பு காரணமாக நீர் ஒழுக்கு ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்களும், அடித்தளமும் அமைக்கப்பட்டது. பாறைகள் உள்ள பகுதிகள் மட்டும் விடப்பட்டன.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான இப்பணியை, இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இறுதி முதல் புதுப்பிக்கப்பட்ட சத்யசாய் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.கால்வாய் புனரமைக்காததற்கு முன், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் 10 நாட்கள் பயணம் செய்து ஊத்துக்கோட்டை "ஜீரோ பாயின்ட்டை வந்தடையும். மேலும், நீர் ஒழுக்கு காரணமாக ஆயிரம் கன அடி என்ற அளவில் திறந்துவிடப்படும் நீர், ஊத்துக் கோட்டைக்கு வரும் போது 450 முதல் 500 கன அடியாக குறைந்திருக்கும். ஆனால், சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பின், திறந்துவிடப் பட்ட ஐந்து நாட்களில் கிருஷ்ணா நீர் ஊத்துக்கோட்டை வந்துவிடுகிறது. மேலும், ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டால், 900 கன அடி நீர் வந்து சேர்கிறது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் இந்த பிரமாண்ட திட்டத்தால், இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்கு தடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணா நதி கால்வாய் புனரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமாக "ஜீரோ பாயின்ட்டான ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரையிலான 17 கி.மீ., தூர கால்வாயும் 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர், தங்கு தடையின்றி அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஏரி வந்தடைகிறது. ஸ்ரீசத்யசாய் கால்வாயின் பயனாக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தரும் கிருஷ்ணா நீர் இன்றைக்கு சிந்தாமல், சிதறாமல் சென்னை வந்து சேர்கிறது.சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.