பதிவு செய்த நாள்
23
நவ
2018
06:11
புட்டபர்த்தி: மனிதர்களுக்கு உண்மையான மன நிறைவை பகவான் சத்யசாய் பாபா மட்டும் தான் வழங்க முடியும். சேவை தான் நினைவில் நிற்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
சத்ய சாய்பாபாவின் 93வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவ.23) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில், ஸ்ரீசத்யசாய் மத்திய டிரஸ்ட்டின் வருடாந்திர அறிக்கை, பகவான் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ்.நாகானந்த் பேசுகையில், சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மாநில அரசு ஆரம்பித்துள்ள என்.டி.ஆர்., சுஜாலா பாதகம் திட்டத்தில் டிரஸ்ட் பங்கேற்றுள்ளது. ஆசிரமம், அதனை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான எரிசக்தி 40 சதவீதம் சூரிய சக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2 சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள், 2 பொது மருத்துவமனைகள், 2 மொபைல் மருத்துவமனைகள் மூலம் சுகாதார திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சாய்பாபா எப்போதும் நம்மிடம் தான் உள்ளார். எப்போது அழைத்தாலும், அவர் அங்கு இருப்பார். சிறந்த சேவை மற்றும் உங்களுடன் இணைந்து பணியாற்ற பாபா என்னை அழைத்துள்ளார். அவர், பெரிய பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளார். தொழில், பணம் சார்ந்த மன நிறைவை தான் கொடுக்கும். ஆனால், உண்மையான மன நிறைவை பாபா தான் அளிக்க முடியும். வாழ்நாள் முழுவதும் நாம் ஆற்றும் சேவை மட்டும் தான், எப்போதும் நினைவில் கொள்ளப்படும். சத்யசாய் அமைப்பு, மத எல்லைகளை கடந்து பணியாற்றுகிறது. பகவானின், பெருமைகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். உலகளவில் நாம் சேவை செய்ய பகவான் நம்முடன் உள்ளார் என்றார். விழாவில் பஜனைகளும், மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.