பதிவு செய்த நாள்
16
டிச
2018
02:12
சேலம்: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, வரும், 18ல், சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க, 12ம் ஆண்டாக, ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழுவினர், லட்டுகள் தயாரிக்கும் பணியை, நேற்று தொடங்கினர். அவர்கள், 300 கிலோ கடலைமாவு, 600 கிலோ சர்க்கரை, 50 கிலோ முந்திரி, 35 கிலோ உலர் திராட்சை, 20 டின் சமையல் எண்ணெய், 50 கிலோ நெய், 15 கிலோ ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கின்றனர். மேலும், கோவில் முழுவதும், வண்ண மலர் தோரணங்கள் அலங்காரம் செய்யப்படவுள்ளது. அதற்காக, மலர் மாலை தொடுக்கும் பணியில், திரளான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், லட்டுகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.