பதிவு செய்த நாள்
19
டிச
2018
12:12
சேலம்: பெருமாள் கோவில்களில், கோவிந்தா கோஷம் முழங்க, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம், கடந்த, 7ல் தொடங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர். மூலவர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கைக்கு, தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இன்று தொடங்கி, வரும், 29 வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது.
உத்தமசோழபுரம், அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, கடந்த, 7ல் தொடங்கியது. நேற்று காலை, 3:00 மணிக்கு, கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்ப, பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் சுவாமியை, ஸ்ரீதேவி, பூதேவியருடன், சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, சென்றாயபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன், சப்பரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
காடையாம்பட்டி, காருவள்ளியிலுள்ள, வெங்கட்ரமணர் கோவிலில், சொர்க்கவாசல் வழியாக, சர்வ அலங்காரத்தில் சுவாமி வந்து அருள்பாலித்தார். இதையொட்டி, பக்தசபா சார்பில், கோவில் உட்பிரகாரம், கொடிமரம், தாயார் சன்னதி உள்ளிட்ட இடங்களில், 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல்,சேலம், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமி நாராயணர்; சின்னக்கடை வீதி வரதராஜ பெருமாள்; செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்கநாதர்; சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி; காளிப்பட்டி சென்றாய பெருமாள்; ஓமலூர், கோட்டை விஜயராகவ பெருமாள்; இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள்; சங்ககிரி, வி.என்.பாளையம் வசந்த வல்லபராஜ பெருமாள்; தம்மம்பட்டி உக்ரகதலி லட்சுமி நரசிம்மர்; வீரகனூர் கஜவரதராஜ பெருமாள்; நரசிங்கபுரம் பெருமாள்; கல்வராயன்மலை அடிபெருமாள்; பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர்; வாழப்பாடி சென்றாயபெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொட்டும் பனியில்...: ஆத்தூர், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு ரத்ன கிரீடம் சூட்டப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 5:30 மணிக்கு, கோவில் வடப்புறம் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன், பெருமாள் திருவீதி உலா வந்தார். அவரை தரிசிக்க, கொட்டும் பனியில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காத்திருந்த பக்தர்கள், கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். இதையொட்டி, மூலவர் வெங்கடேச பெருமாள், முத்தங்கி அலங்காரம்; கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணுதுர்க்கை சுவாமிகளுக்கு, வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சுவாமி, சந்தனகாப்பு உருவ அலங்காரம், அகிலாண்டேஸ்வரி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.