பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில், சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கிழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சாசன பூஜை, பஞ்சஆவரணபூஜை, கடம் புறப்பாடாகி நடராஜர்க்கு மகா அபிஷேகம் நடந்தது.
நேற்று (டிசம்., 23ல்) காலை 7:00 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அர்ச்னை, உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர், ஆனந்த தாண்டவ அலங்காரத்தில் எழுந்தருளி சோட சோபவுபசார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலாவும், ஆலய வளாகத்தில உற்சவமும்நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் காலை சிவகாமி சமேத நடராஜருக்கு பால், தயிர், தேன், பல விதமான பழங்கள், பூக்கள், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து பகல் 11.55க்கு மகா தீபாராதனையும், பகல் 12.05 மணிக்கு, ஆலயத்திற்குள் சிவபக்தர்கள் நடராஜரை தோளில் சுமந்து கொண்டு ஆனந்த தாண்டவம் செய்யும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
* விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில், அகத்தீஸ்வரன் கோவில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில், தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து ஆருத்ரா பூஜை நடந்தது. பின்னர் சன்னதி வளாகத்தினுள் சுவாமி வலம் வந்தது.
* வானூர் உப்புவேலூரில் உள்ள, பிரகன்நாயகி உடனுறை திருமுகிலீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மாலை 7:00 மணிக்கு சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் வீதியுலா நடந்தது. நேற்று (டிசம்., 23ல்) காலை 6:00 மணிக்கு ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
* கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மூலவர் ராமநாதீஸ்வரருக்கும், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் தமிழ்வேதவார வழிபாட்டுச் சபையினரின் திருவெம்பாவை, திருப்பாவை பாடல் நிகழ்ச்சியும், நடராஜர் கோட்டை நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது.
* கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று (டிசம்., 23ல்)அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடத்தி, நடராஜருக்கு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, ருத்ர மந்திரங்களை வாசித்து, அலங்கார தீபங்களுடன் பூஜைகள் செய்தனர்.சிவனடியார்கள் சிவபுராணம் பாடியபின் திரை நீக்கி ஆருத்ரா தரிசன வைபவம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதேபோல் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், செம்பொற்சோதிநாதர் கோவில் நடராஜர், கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.