பதிவு செய்த நாள்
24
டிச
2018
04:12
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கடந்த, 14ல், மாணிக்க வாசகர் திருவெம் பாவை பாடல் உற்சவத்துடன், ஆருத்ரா தரிசனம் துவங்கியது. பிறகு, 15 முதல், 21 வரை தினமும் மாலை, 6:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிசேகம், புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மதியம், 12:30 மணிக்கு, கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம், மாலை பிச்சாண்டார் திருவீதி உலா, இரவு, 9:00 மணிக்கு அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. நேற்று (டிசம்., 23ல்) காலை, 5:00 மணி முதல், 6:30 மணி வரை
நடராஜருக்கு அபிஷேகம் மற்றும் சாந்து கட்டளை நடந்தது. காலை, 10:30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பகல், 3:00 மணிக்கு சித்சபா பிரவேசம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுத்தோறும் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (டிசம்., 23ல்) காலை, 6:00 மணிக்கு, கும்பம் வைத்து பூஜையுடன், விழா துவங்கியது.
பின்னர் நடராஜர், பெரிய நாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணியளவில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், உபயதாரர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவில், லாலாப்பேட்டை செம்பொர் ஜோதீஸ்வரர், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், தோகைமலை மலைக்கோவில் மீது அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பால தண்டாயுதபாணி கோவிலில், திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. மேலும், சின்னரெட்டிப்பட்டி மலைக்கோவில், ஆர்.டி.மலை சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடந்தது.
* பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், கடந்த 4ம் தேதி, கணபதி பூஜையுடன் திருவெம் பாவை உற்சவ திருவிழா துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) மாலை பிச்சாண்டவர் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று (டிசம்., 23ல்) காலை 6:00 மணிக்கு, கோடி அர்ச்சனை மண்டபத்தில், சிவகாமி உடனமர் நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
* காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள, காசிவிஸ்வநாதர் ஆலயம், அகிலாண்ட புரத்தில் உள்ள அகிலாண்டிஸ்வரர், மருதுறை பட்டிஸ்வரர், ஊதியூர் கையிலாகநாதர், நத்தக்காடையூர் ஜெயம்கொண்டிஸ்வரர், மடவிளாகம் ஆருத்ரா கபாலிஸ்வரர் போன்ற சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நேற்று (டிசம்., 23ல்) நடந்தது. விபூதி, மஞ்சனை, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடராஜருக்கு செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று (டிசம்., 23ல்) காலை சிறப்பு அலங்காரத்தில், சிவபெருமான் முக்கிய வீதிகளில் திருவீதி உலா கொண்டு வரப்பட்டார்.
* அமராவதி ஆற்றங்கரையில் உள்ள, பிரசித்தி பெற்ற, அகத்தீஸ்வரர் கோவிலில், ஆரூத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று (டிசம்., 23ல்)அதிகாலை, 4:00 மணிக்கு, 16 வகையான புனித நீர் மற்றும் திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல் மீனாட்சிபுரத்தில் உள்ள, புராதன சிறப்பு மிக்க, மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் மற்றும் தென்தாரை ராஜவாய்க்கால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், மார்கழி மாத திரும்வெம் பாவை விழா, கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அதிகாலை, 5:00 மணிக்கு, மாணிக்கவாசகர் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை மூல மூர்த்திக்கு நெய் அபிஷேகமும், உற்சவர் நடராஜருக்கு, 16 திரவிய பொருட்களில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், நடராஜர் சிறப்பு அலங்கார திருவீதி உலா, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்குகூண்டு, கனி மார்கெட், பி.எஸ்.பார்க்., காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.
* கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில், சாரதா மாரியம்மன் மற்றும் மாதேஸ்வரன் கோவில் ஈஸ்வரன் உள்ளிட்ட கோவில் உற்சவர் சுவாமிகள், பல்லக்கில் வைத்து அலங் கரித்து, கோபி தெப்பக்குளம் வீதிக்கு, நேற்று (டிசம்., 23ல்) காலை கொண்டு வரப்பட்டன. ஆருத்ரா தரிசனத்தில், மணக்கோலத்தில் இருந்த சுவாமிகளை பல்லக்கில் சுமந்தபடி, பக்தர்கள் ஆனந்த நடனமாடினர்.
* திருவாதிரையை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் நேற்று (டிசம்., 23ல்) காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றன. நிறைவாக, சுவாமி திருவீதி உலா நடந்தது.
* ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (டிசம்., 23ல்) காலை, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார் கோவிலில், திருவாதிரையை முன்னிட்டு, நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 4:30 மணிக்கு, தில்லை கூத்தப்பெருமானுக்கு, திருமுழுக்கு நடந்தது. திருவெம்பாவை வழிபாடுகளுடன், மாணிக்கவாசகர் - சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர், மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர் உற்சவர், ஆருத்ரா தரிசன திருவீதி உலா, துவங்கியது. இதில், அறுபத்துமூவர் மகளிர் அணியினரின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது.