பதிவு செய்த நாள்
25
டிச
2018
12:12
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மந்திரக்கல் மற்றும் 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆஉராஞ்சுக்கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர், கைலாசநாதர் கோவில் முன் உள்ள மந்தைவெளி பகுதியில், கல்வெட்டு எழுத்துகள் பொறித்த ஒரு கல், பல ஆண்டுகளாக காணப்படுகிறது.
உத்திரமேரூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வு மையத்தலைவர், பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள், இந்த கல் குறித்து அறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: இந்த கல், 77 செ.மீ., உயரம், 52 செ.மீ., அகலம் உடையது. மந்தைவெளி கல், கோமரிக்கல் மற்றும் சன்னியாசிக்கல் என, பல பெயர்கள் பெற்றுள்ளன. அக்கால கட்டத்தில், மாடுகளுக்கு கோமாரி போன்ற கொள்ளை நோய்கள் பரவிய போது, கால்நடைகளை பாதுகாக்க, கருங்கல்லில் கட்டங்கள் வரைந்து, மந்திர எழுத்துகளையும், குறியீடுகளையும் பொறித்து, நிலத்தில் நட்டு வைத்தனர். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை, அக்கல்லை சுற்றி வரச் செய்து, மஞ்சள், வேப்பில்லை மற்றும் மூலிகை கலந்த நீரை பருக செய்து, இந்த மந்திரக்கல்லை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இவ்வாறு செய்தால், கால்நடைகளுக்கு நோய் குணமாகும் என்பது, அம்மக்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. கடந்த, 18ம் நுாற்றாண்டை சார்ந்த இந்த கல்லின் உச்சியில், சங்கு சக்கர சின்னங்களுடன், 16 கட்டங்களில், கிரந்தம் மற்றும் வடமொழி மந்திர சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போதும், மாட்டு பொங்கல் நாளில், கால்நடைகள் இந்த கல்லை சுற்றி வந்து, வழிபட செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.