தைப்பூச தினத்தில் இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* குன்றுதோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம். * ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் பயம், துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக. * வேதம் போற்றும் வித்தகனே! குகப்பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள் உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.