பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் கைலாயத்திலுள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைத் தன் வழிபாட்டுக்காக கொண்டு வர விரும்பினார். தன் சீடரான இடும்பாசுரனிடம் இப்பணியை ஒப்படைத்தார். இடும்பனும், தன் மனைவி இடும்பியுடன் புறப்பட்டான். இரு சிகரங்களையும் காவடியாகக் கட்டி தோளில் சுமந்து வந்தான். அதை தன் இருப்பிடமாக்கிக் கொள்ள விரும்பிய முருகன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் பழநியை வந்தடைந்ததும், அந்த மலைகளை கீழே வைத்து விட்டு இளைப்பாறத் தொடங்கினான். அப்போது முருகன் சிறுவன் வடிவில் சிவகிரியான பழநி மலைக்குன்றின் மீதேறி தனக்கே உரியது என்று கூறினார். வெகுண்டு எழுந்த இடும்பாசுரன் சிறுவனைத் தாக்க முயன்று இறந்தான். இடும்பி குருநாதரான அகத்தியரின் உதவியை நாடினாள். சிவகிரியில் வீற்றிருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை உணர்ந்த அகத்தியர், தன் சீடருக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டினார். முருகனும் இடும்பனுக்கு உயிர் கொடுத்ததோடு பழநிமலையின் காவலனாகவும் நியமித்தார். இதன் பின்னரே, இடும்பன் போல முருகன் அடியார்களும் காவடி சுமக்கும் வழிபாடு இங்கு ஏற்பட்டது.