பதிவு செய்த நாள்
23
ஜன
2019
11:01
கிருஷ்ணகிரி: கூடுதல் இன்ஜின் உதவியுடன், கோதண்டராமர் சிலையை ஏற்றிச் செல்லும் கார்கோ லாரி, பாம்பாறு தரைப்பாலத்தைக் கடந்து சென்றது.கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் உடைய பாறை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடையில், வெட்டி எடுக்கப்பட்டது.
இதில், முகம் மட்டும் செதுக்கப்பட்டு, கடந்த மாதம், 7ல், 240 டயர்களால் வடிவமைக்கப்பட்ட சரக்கு லாரியில், சிலை புறப்பட்டது. ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாமல், ஆறு நாட்களாக, லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து, அதிக திறனுள்ள இரண்டு கூடுதல் இன்ஜின் வரவழைக்கப்பட்டு, நேற்று பகல், 12:30 மணிக்கு, பாம்பாறு தரைப்பாலத்தை, லாரி கடந்தது.பின், ஊத்தங்கரை வழியாக, மாலை, 3:15 மணிக்கு, மெதுவாக கடந்து வந்தது.ஊத்தங்கரை நகர் பகுதியை கடந்த சிலைக்கு, தேங்காய் உடைத்து, பூஜை செய்து, பொதுமக்கள் காசுகளை இறைத்தனர். சாமல்பட்டி ரயில்வே பாலம் வழியாக, லாரி கடக்க முடியாது.எனவே, போச்சம்பள்ளி சிப்காட் வழியாக, கிருஷ்ணகிரிக்கு வர உள்ளது. இதனால், நேற்று காலை முதல், திருவண்ணாமலை சாலை வழியாக சென்ற வாகனங்கள், காரப்பட்டு வழியாக, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.