பதிவு செய்த நாள்
23
ஜன
2019
02:01
ஆர்.கே.பேட்டை : தை மாதம், எட்டாம் நாளில், மயில் வாகன பெருமானுக்கு பூஜை நடத்தும் பெண்கள், நேற்று (ஜன., 22ல்) மாலை, ஒன்பது வகையான காய்கறிகளுடன் படையல் வைத்தனர்.
பொங்கல் பண்டிகையை அடுத்த, எட்டாம் நாளில், மயில் வாகனன் முருகப் பெருமானுக்கு முதல் பூஜை நடத்தப்படுவது பெண்களின் வழக்கம். இதை தொடர்ந்தே, இதர வழிபாடுகள் துவங்கும்.
மாலை நேரத்தில், வானில் நட்சத்திரம் தோன்றும் போது, மயில் வாகனன் முருகப் பெருமான் தரிசனம் தருவதாக ஐதீகம். அந்த நேரத்தில், வீட்டு முற்றத்தில் பச்சரிசி மாக்கோலம் போட்டு, அலங்கரிப்பது பெண்களின் வழக்கம்.
வாயிலில் இருந்து பூஜை அறை வரை, பாலமுருகனின் பாதச்சுவட்டை பச்சரிசி மாவில் பதிப்பதும் உண்டு.இந்த பூஜையின் சிறப்பு படையலாக, ஒன்பது வகையான காய்கறிகள், பயறு மசியல், நெய் அமைந்திருக்கும் என்பது சிறப்பு. நேற்று (ஜன., 22ல்), மாலை, 6:00 மணியளவில், பெண்கள் இந்த சிறப்பு பூஜையை நடத்தினர்.