பதிவு செய்த நாள்
02
பிப்
2019
12:02
ஓசூர்: ஓசூர் அருகே, திம்மசந்திரம் சப்ளம்மா தேவி கோவில் மாடுகள் திருவிழாவில், நான்கு கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, திம்மசந்திரம் சப்ளம்மா தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாடுகள் திருவிழா நடப்பது வழக்கம். கடந்தாண்டு, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, நான்கு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஜோடி மாடு, ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டுக்கான மாடுகள் திருவிழாவை, முன்னாள் காங்., எம்.எல்.ஏ., கோபிநாத், நேற்று காலை துவக்கி வைத்தார். தொடர்ந்து சம்ளம்மா தேவிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மேலும், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வரும், 8 வரை திருவிழா நடக்கிறது. குறிப்பாக வரும், 6ல் நடக்கும் விழாவின் போது, பல்லக்கு உற்சவம் நடக்க உள்ளது. விழாவில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வருவர் என்பதால், இந்தாண்டும் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை நடக்கும் என, விழா குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, கஜேந்திரமூர்த்தி, தியாகராஜ், அமரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.