பதிவு செய்த நாள்
16
பிப்
2019
12:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆறாம் நாள் உற்சவத்தில், விபச்சித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி காலையில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரித்த வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்வாக, ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று, விபச்சித்து முனிவருக்கு பெரியநாயகர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு மேல் நுாற்றுக்கால் மண்டபத்தில் புஷ்ப மஞ்சத்தில் மூஷிகம், மயில், ரிஷப வெள்ளி வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
12:40 மணிக்கு மேல், சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.நண்பகல் 1:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகார வீதியுலா வந்ததும், கிழக்கு கோபுர வாயிலில், மலர்கள் துாவியபடி, கயிலை வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, பழமலைநாதா, திருமுதுகுன்றீஸ்வரா என கோஷமிட, பெரியநாயகர் சுவாமி, விபச்சித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. வரும் 18ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 19ம் தேதி மாசிமகம், 20ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.