பதிவு செய்த நாள்
16
பிப்
2019
12:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, சிவாலயங்களில் ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிவுலா நடந்தது.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி, ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவாலங்களில், கடந்த, 10 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து, 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு, அந்தந்த கோவில் உற்சவ சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது.அனைத்து சிவாலயங்களிலிருந்தும் ஓலைச்சப்பரம் புறப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக நாகேஸ்வரர் கோவில் வீதிக்கு வந்தது. அங்கு பக்தர்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சியளித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தின் போது, நாகேஸ்வரர் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதேபோல் மாசி மகத்தின் ஓலைச்சப்பர வீதிவுலாவின் போது, ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் நாகேஸ்வரர் கோவிலுக்கு சென்று காட்சி கொடுப்பது வழக்கம்.அதேபோல் மாசி மகத்தின், 4வது நாளான நேற்று முன்தினம் இரவு வைணவத் தலங்களான சக்கரபாணி, ஆதிவராக பெருமாள், ராஜகோபாலசுவாமி கோவிலிலிருந்து, பெருமாள் தாயாரோடு கருடவாகனத்தில் புறப்பட்டு, சக்கரபாணி கோவிலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.