பதிவு செய்த நாள்
23
மார்
2019
01:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில், ஆற்று உற்சவ திருவிழா நடந்து வருகிறது. திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் சார்பில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) ஆற்று உற்சவ விழா நடந்தது.
விழாவை ஒட்டி, மாலை, 3:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை யுடன் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணி வந்தடைந்தார். பின், அங்கிருந்து மாட்டு வண்டியில், பொதட்டூர்பேட்டை ரோடு நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்தில் உள்ள மண்டபத்தில், மாலை, 6:00 மணிக்கு எழுந்தருளினார்.அங்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், இரவு, 8:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலை வந்தடைந்தார்.