சமயபுரத்தில் வீற்றிருக்கும் மகமாயி ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்றும் வணங்கப்படுகிறாள். ஏன் தெரியுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கொள்ளைக்கூட்டத்தாரால் தனது உறவுகளை இழந்த பெண்ணொருத்தி, மகமாயியை கோபத்தில் ‘உனக்கு கண்ணில்லையோ!’ என்று திட்டினாளாம்.
அன்றிரவே மானிட உருவம் தாங்கி வந்த மகமாயி அந்த பெண்ணிடம் தன் கூந்தலில் பேன் பார்க்கச் சொன்னாளாம். கூந்தலை விரித்துப் பார்த்த அந்த பெண் அலறினாளாம். ஒவ்வொரு ரோமக்கால்களிலும் ஒரு கண் விழித்துப் பார்க்க, வந்திருப்பது மகமாயி என்று உணர்ந்து அழுதாளாம். பக்தையைத் தேற்றிய மகமாயி கள்வர்களிடமிருந்து உறவுகளை மீட்டுக்கொடுத்து காப்பாற்றினாளாம். அன்று முதல் அந்த ஊர் கண்ணபுரம் என்றும் மகமாயி ஆயிரம் கண்ணுடையாள் என்றும் வணங்கப்பட்டாள். அந்த பெண்ணுக்குக் காட்சி தந்த மாசி மாத கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை மகமாயி தனது பக்தர்களைக் காக்க பச்சைப் பட்டினி விரதம் இருந்துவருகிறாள். இந்த ஆண்டும் (மார்ச் -10 முதல் ஏப்ரல் 7 வரை) மகமாயி விரதமிருந்து வருகிறாள்.