பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
02:04
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீ மிதி திருவிழாவில், நேற்று (ஏப்., 2ல்) காலை, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி விழா, கடந்த மாதம், 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. மதியம், மகாபாரத சொற்பொழி வும், இரவு, மகாபாரத நாடகமும் நடக்கிறது. நேற்று (ஏப்., 2ல்) காலை, கோவில் வளாகத்தில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.இதற்காக, 35 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது.
தொடர்ந்து அர்ச்சுனன் தவ வேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடிவாறு ஏறினார். தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது, திரளான பெண்கள் பனைமரத்தின் கீழ் படுத்து, குழந்தை வரம் வேண்டி, பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.நிகழ்ச்சியில், 1,000க் கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர். வரும், 7ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.