பதிவு செய்த நாள்
08
மார்
2012
11:03
நற்செயல்களைச் செய்வதில் சிறிது கூட தாமதம் கூடாது என்கிறார் சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள். சுயநலம் கொண்டவன் தன் குடும்பத்தின் மீது மட்டுமே அன்பு செலுத்துவான். மற்றவர்கள் மீது அவன் அன்பு காட்டுவதில்லை. தன் பிள்ளை மூடனாக இருந்தாலும், அவன் மேல் அன்பு காட்டும் பெற்றவர்கள், மற்ற பிள்ளைகளை நேசிப்பதில்லை. வயதான காலத்தில் தன் பிள்ளைகள் மட்டுமே தன்னைக் காப்பாற்றுவர் என்ற எண்ணமே இதற்குக் காரணம். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை அவரவர் அனுபவத்தில் பார்த்தால் தான் தெரியும். சங்கர பகவத்பாதர் ஒரு ஸுக்தியில், ""பணக்காரன் தன்னுடைய புத்திரனைக் கண்டாலும் பயப்படுகிறான். ஏன் என்றால் தன் மகன், பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு எப்போது ஓடப் போகிறானோ என்ற எண்ணம் தான், என்று குறிப்பிடுகிறார். பணம் மனிதனை பல தவறான வழிகளில் தூண்டி விடுகிறது.
மனிதனுக்கு பொன், பெண் ஆகிய இரண்டு விஷயத்தில் பேராசை ஏற்படுகிறது. இந்த இரண்டிலும் ஆசை இல்லாதவனே உத்தமன். அவனே தர்மப்படி வாழ்வதில் ஈடுபாடு கொண்டிருப்பான். தர்மத்தின் மூலமாக மட்டுமே மனிதன் நிரந்தர சுகம் பெற முடியும். ஒவ்வொருவரும் தனக்குத் தானே நன்மையைத் தேடி கொள்ள எண்ணினால், தர்மப்படி வாழ்வது ஒன்றே வழி. வாழும் காலத்தில் செய்த தர்மத்தின் புண்ணிய பலன் இறந்த பின்னும் ஒருவரைத் தொடர்ந்து வரும். வேறு யாரும் உங்களுக்கு அப்போது உதவி செய்ய முடியாது. ஒரு நற்செயலைச் செய்ய இப்போது புத்தி வந்து விட்டது என்றால். அதை உடனே செய்து விட்டால் சரி! நாளை செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டால், அந்த 24மணி நேரத்திற்குள் புத்தி எப்படி மாறுமோ... யாருக்குத் தெரியும்? அதனால் தர்மத்தை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விட்டால் தாமதப்படுத்தக் கூடாது. பவித்ரமான வேதம் பயில்வது, பகவானை பூஜிப்பது, தியானம் செய்வது இவையெல்லாம் உயர்ந்த தர்மங்கள். சாஸ்திரத்தில் சொல்லியபடி தர்மத்தை அனுஷ்டானம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும். நம் மனதின் ஒரு பக்கத்தில்,""நான் எனக்காக என்ன பண்ணிக் கொண்டேன்?, என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். கட்டிய வீடு, வாங்கிய நிலம், பொன், பணம் ஆகியவை எல்லாம் நமக்கு ஒருநாளும் சொந்தமாகாது. நாம் செய்த தர்மம் மட்டுமே மரணத்திற்கு அப்பாலும் கூட வரும். இந்த சூட்சுமம் தெரியாமல் வாழ்க்கை நடத்தினால் அதை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. தர்மத்தை பின்பற்றி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும். சிருங்கேரி சுவாமிகள் நாளை ( மார்ச்9) சேலம் இரண்டாவது அக்ரஹாரம் சிருங்கேரி சங்கரமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். தொடர்புக்கு: 99449 63750.