பதிவு செய்த நாள்
07
மே
2019
04:05
ஒடிசா என்றதும் பூரி ஜகந்நாதர் கோயிலும், அங்கு ஆனி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி இழுக்கின்ற திருத்தேர் உற்சவமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்தத் திருத்தேர் உற்சவத்துக்கு முன்னோடியாக நடைபெறுவது படகு உற்சவம். சந்தன் யாத்ரா என்று சொல்லப்படும் இந்தத் திருவிழாதான் தேர்த் திருவிழாவுக்கு முன்னோட்டம் என்பது சுவாரஸ்யமான விஷயம்!
கோயிலுக்குக் கிழக்கு வாசலே பிரதானம். இரண்டு பெரிய சிங்கங்களின் சிலைகள் உள்ளன. இதற்கு சிம்மத்வார் என்று பெயர். வெளியில் அருணஸ்தம்பம் உள்ளது. கல் தூணின் உச்சியில் கோயிலைப் பார்த்தபடி அருணனின் சிலை உள்ளது. ஜகமோஹன் என்று அழைக்கப்படும் பெரிய மண்டபத்தில் ஒரு தூணின் மேல், ஜகந்நாதரை நோக்கித் தலை வணங்கியபடி கருடனின் திருவுருவம் காணப்படுகிறது. ஸ்ரீசைதன்ய மகாப்ரபு இன்றும் கருடத்தூணின் பின்னால் நின்று, ஜகந்நாதரைத் தரிசிப்பதாகக் கூறுகிறார்கள். விசேஷ நாட்களில் கருடத் தூணுக்கு திருமஞ்சனமும் செய்கிறார்கள்.
கர்ப்பக்கிரகம் விமான மண்டபம் எனப்படுகிறது. ரத்ன வேதிகை ரத்ன சிம்மாஸனம். இடமிருந்து வலமாக பலபத்ரர் வெள்ளை நிறம், ஸுபத்ரா மஞ்சள் நிறம், ஜகந்நாதர்கறுப்பு நிறம். மேலும் ஸுதர்ஸனர், நீல மாதவர் (மதன் மோஹன் எனப்படும் உற்சவ மூர்த்தி), லக்ஷ்மீ, ஸரஸ்வதி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். காலை ஐந்தரை மணி பூஜை முடிந்து சேவை தரும்போது சுமார் 10 நிமிட நேரம் (டிக்கெட் ரூ.25/) மூலமூர்த்திகளின் அருகே சென்று சேவித்து, வலம் வரலாம். அருகே சென்று தரிசிக்கும்போது அவர்களுடைய பிரம்மாண்டமான திருமேனிகளின் அழகும், அலங்காரமும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
அக்ஷய திருதியை அன்று முதல், மூலமூர்த்திகள் மூவருக்கும் தினமும் சந்தனக் காப்பு சாத்துகிறார்கள். உற்சவ மூர்த்தி மதன் மோஹன், ராதா லக்ஷ்மீ, பாண்டவர் என்று பல மூர்த்திகளை மாலை 6 மணி அளவில் பல்லக்குகளில் சந்தனக் குளத்துக்கு எழுந்தருளப்பண்ணுகிறார்கள். ராதா, மாதவனுக்கு தனிப்படகு, மற்ற மூர்த்திகளுக்கு மற்ற மூர்த்திகளுக்கு ஒரு படகு. பன்னீரும், சந்தனமும் மணக்கிறது. மண்டபத்தின் அருகேயே சென்று சேவிக்கலாம். அங்கேயே தளிகை பண்ணி பெருமானுக்குப் படைத்துவிட்டு, படகு சவாரி, வெயில் நாட்களில் தினமும் படகு சவாரிதான். இரவு பத்தரை மணிக்குத்தான் திரும்புகின்றனர்.
மொத்தம் 42 நாட்களுக்குக் கொண்டாடப்படும் இந்த விழா, இரண்டு பகுதிகளாக நடைபெறுகிறது. முதல் 21 நாட்கள் பஹார சந்தனா எனப்படுகிறது. இவ்விழா, தேர்த் திருவிழாவின் முன்னோட்டம். அக்ஷய திருதியை அன்றுதான் இவ்விழா தொடங்குகிறது. தேர்களைச் செய்ய ஆரம்பிப்பதும் இன்றுதான். அடுத்த 21 நாட்களை பிடாரா சந்தனா என்கிறார்கள். இந்தச் சமயத்தில் கோயிலுக்குள்ளேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
குளம் என்றால் பெரிய ஏரி போன்ற நீர்ப்பரப்பு. பார்க்கப் பரவசமாக இருக்கிறது. நரேந்திர குளம் என்று இதைச் சொல்கிறார்கள். வண்ணமயமான துணிகளாலும், மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட படகு. அதன் முகப்பில் இரண்டு அன்னங்கள். பகவான் ஒருவர் பின்னால் செல்கின்றான். என்றால், அவர்கள் தூயவர்களாக இருக்க வேண்மல்லவா? தூய்மைக்கு அடையாளம் அன்னம் தானே நிறத்தாலும், நல்லவற்றைப் பகுத்தெடுத்துக் கொள்ளும் தன்மையாலும், நீங்களும் அப்படியிருந்தால், உங்கள் பின்னாலும் ஜகந்நாதன் வருவார். என உணர்த்துகிறது இந்தப் படகு உற்சவம்.