ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் மிக விசேஷமான உத்சவம். அன்றுதான் பக்தர்கள் பெருமாளையும் தாயாரையும் ஒன்றாகத் தரிசிக்க முடியும். இதற்கு சேர்த்தி என்று சொல்வார்கள். பங்குனி சேர்த்தி பிரம்மலோகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு உத்சவமாகும். இதற்கு ஆதிபிரம்மா திருநாள் என்றும் பெயருண்டு. இத்திருநாள் அயோத்தியில் ஸ்ரீராமனால் கொண்டாடப்பட்டது. பிரணயகலகம் என்பதும் இதுதான். பிரணயகலகமானது, ஜீவாத்மா, பரமாத்மா இடையே நடைபெறும் போராட்டத்தின் சூட்சும வெளிப்பாடு என்று தத்வார்த்தமாகச் சொல்வார்கள். ஜீவாத்மாவுக்காக அதீத கருணை காட்டுபவள் ரங்கநாயகித் தாயார். நாம் செய்யும் பாபங்களை மன்னித்து, நமக்காக எம் பெருமானிடம் சிபாரிசு செய்பவள் இவளே. இந்த சேர்த்தி உற்சவத்தில் பெருமாளையும் தாயாரையும் தரிசிப்பதால், கணவன் மனைவியரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மறையும். அன்னியோன்யம் கூடும். பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் ஒன்றிணைவர். தவிர திருமணமும் கைகூடும்.