திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று (மே., 9ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மே 8 மாலை வாஸ்துசாந்தி நடந்தது. நேற்று (மே., 9ல்) காலை 7:15 மணிக்கு கொடியேற்றத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின. காலை 7:45 மணிக்கு கொடியேற்றம் நடந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பஞ்சமூர்த்திகள், சிவாச்சார்யார், வில்வ மரத்திற்கு காப்புக் கட்டி விழா துவங்கியது. இரவு 8:00 மணிக்கு மண்டபகப்படிதாரர் தீபாராதனை நடந்தது. இரவில் ஐம்பெரும் கடவுளர்கள் திருவீதி வலம் வந்தனர்.
தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். மே 12 காலையில் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு தீபாராதனையும், மே 13ல் அம்மன் தவத்திற்கு எழுந்தருளலும், திருக்கல்யாணமும்,மே17ல் தேரோட்டம், மே 18 ல் தெப்பமும் நடைபெறும்.