சதுரகிரியில் மகா சிவராத்திரி இரவு நேர தரிசனத்திற்கு அனுமதி; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 05:02
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் தற்போது தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சாதாரண நாட்களில் தினமும் நுாற்றுக்கு மேற்பட்டோரும், விடுமுறை நாட்கள், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நாளை சனி பிரதோஷமும், பிப். 15 மகா சிவராத்திரியும், பிப். 17ல் அமாவாசை வழிபாடும் நடக்கிறது. இதில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 15ம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகள் நடக்கிறது. இதனை தரிசிக்க பக்தர்கள் விரும்புகின்றனர். ஆனால், இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது என்பதால் பக்தர்கள் சிவராத்திரி வழிபாட்டை தரிசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மகா சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.