பதிவு செய்த நாள்
10
மே
2019
03:05
தம்மம்பட்டி: மழை வேண்டி, காசி விஸ்வநாதர் கோவிலில், நந்தி பகவானுக்கு, கழுத்து வரை நீர் நிரப்பி, சிறப்பு பூஜை நடந்தது. தமிழகத்தில், இரு ஆண்டாக, பருவமழை பொய்த்து,
நீர்நிலைகள் வறண்டன. காட்டிலுள்ள விலங்குகள், நீரை தேடி, குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் தவிக்கின்றனர்.
விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு உத்தரவுப்படி, மழை வேண்டி, நேற்று (மே., 9ல்), தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில், வருண பிரார்த்தனை நடந்தது.
தொடர்ந்து, காசிவிஸ்வநாதருக்கு ருத்ரஜெப பாராயணம் செய்து, தாராபிஷேகம் நடந்தது. நந்திக்கு நீர் நிரப்பி வழிபட்டால் மழை நிச்சயம் வரும் என்பது ஐதீகம். அதனால், நந்தி பகவானை சுற்றி பிரத்யேகதொட்டி கட்டி, அதில் நீர் நிரப்பி வழிபாடு நடந்தது. பின், நந்தி பகவானுக்கு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே, கஞ்சமலை சித்தர்கோவிலில், வருண யாகம், வருண ஜபம் நடந்தது.