கடலூர்: போதியளவு மழை பெய்யாததால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகள் காயந்து கிடக்கின்றன. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி, சிறப்பு யாகம் மற்றும் பிரார்த்தனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை 10:30 மணியளவில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆழி மழை கண்ணா என்ற பாசுரம் 108 முறை படிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுப்தரா , தலைமை எழுத்தர் ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.