சிவகங்கை: சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நேற்று வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.
இங்கு மே 9 ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா துவங்கியது. தினமும் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி அம்பாள் கேடகம், வெள்ளி ரிஷபம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களில் பெரிய தேரில் சோமேஸ்வரருடன் அம்பாள், சவுந்திரநாயகி அம்பாள் எழுந்தருளினர். சப்பரத்தில் விநாயகர் முன் செல்ல நேற்று காலை 9:45 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி காலை 10:45 மணிக்கு நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு தேர் தடம் பார்த்தல் அதை தொடர்ந்து கேடக வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று தீர்த்தவாரி உற்ஸவத்துடன் வைகாசி விழா நிறைவு பெறுகிறது. காளையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.