காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை உய்யவந்தம்மன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். தேர் பழுதடைந்ததால் கடந்த 4 வருடங்களாக விழாவின் போது சகடையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. தற்போது சாக்கை நாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உய்யவந்தம்மன் கோவிலுக்கு புதியதேர் உருவாக்கப்பட்டு நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சாக்கோட்டை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.