பதிவு செய்த நாள்
18
மே
2019
01:05
கம்பம்: கம்பம் நகரின் மையப்பகுதியில் 10 ஏக்கரில் அமைந்துள்ளது கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில். ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் பிரதான கோயில்கள் உள்ளன.
தென்புறம் பெருமாளுக்கும், வடக்கு பக்கம் சிவனுக்கும் சன்னதிகள் உள்ளன. இவற்றில் பிரம்மா, முருகன், துர்க்கை, பைரவர், விநாயகர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
இவர்களில் தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் எழுந்தருளியிருப்பது சிறப்பு. சிவன் சன்னதிக்கு தெற்குபுறம், தெற்கு பார்த்து அமர்ந்துள்ளார். மேதா தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். வலது கையில் கமண்டலத்துடனும், இடது கை சின்முத்திரையுடன் உள்ளார்.
கமண்டலத்துடன் சுவாமி தமிழகத்தில் இங்கும், விழுப்புரத்திலும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
குருபெயர்ச்சி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிறப்பான கல்விக்கு வழிகாட்டுவார். தடை நீங்கி திருமணம் நடப்பது, செல்வத்தை மீட்பது, குழந்தைபேறு இல்லாதவர்களின் குறை தீர்ப்பது போன்றவை இவரை வணங்குவதால் நடப்பதாக தெரிவிக்கின்றனர்.
சிவாச்சாரியார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் இங்குள்ள தட்சிணாமூர்த்தி தனிச்சிறப்பு பெற்றவர். நான் இருக்கிறேன். ஏன் பயம் என்று கேட்பது போல அவரின் தோற்றம் இருக்கிறது. மோட்சம் வழங்குவார். கோயில் கோபுரத்தின் தெற்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கத்தில் பிரம்மாவும், மேற்கில் விஷ்ணுவும், கிழக்கில் சிவனும் உள்ளனர், என்றார்.
மேலும் விபரங்களுக்கு: 94864 69990