பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
12:06
திருப்பூர்;சமயநெறி பரப்ப, அருள்நெறி பயணத்தில், அன்பர்கள் எங்களுடன் கரம் கோர்த்து வரவேண்டும், என, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார்.அருளாட்சி ஏற்பு வழிபாட்டு பெருவிழா குழு, பல்லடம் வனம் இந்தியா பவுண்டேசன், திருப்பூர் மனவளக் கலை ஆன்மிக கல்வி மையம் சார்பில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின், அருளாட்சி ஏற்பு வழிபாட்டு பெருவிழா, நேற்று நடந்தது.
திருப்பூர், கணியாம்பூண்டி எஸ்.கே.எம்., மஹாலில் நடந்த விழாவில், காலையில், உலக நல வேள்வி, மழை வேள்வி நடந்தது. தமிழ் மணம் விருதுக்கான போட்டிகள் நடந்தன. மாலை யில், அபிநயம் சரஸ்வதி நாட்டியாலய இயக்குனர் விஷாலினியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், குற்றுவிளக்கு ஏற்றி வைத்தார். டாக்டர் சீனியம்மாள் இறைவணக்கம் பாடினார். திருப்பூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் முரளிதரன், தவம் இயற்றினார்.வனம் இந்தியா பவுண்டேசன் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். பேச்சாளர் அனந்த கிருஷ்ணன், பேரூர் ஆதீன மடம் உருவான வரலாறுகளை விவரித்தார்.
வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமட மவுன சிவாச்சலசுவாமி, தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி முன்னிலை வகித்தனர்.சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், மனுநீதி அறக்கட்டளை அய்யா மனுநீதி மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினர். கோவில் தலங்களும், தல தாவரங்களும் என்ற நூலை, மனுநீதி அறக்கட்டளை தலைவர் அய்யா மனுநீதி மாணிக்கம் வெளியிட, உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.
பேரூர் ஆதீனம் ஓர் அறிமுகம் என்ற குறும்படத்தை, எஸ்.கே.எம்., நிர்வாக அறங்காவலர் நடராஜன் வெளியிட, உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார். பண்ணாரியம்மன் குழுமங்கள் தலைவர் பாலசுப்பிரமணியம், பேரூர் மடத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், தலைமை வகித்து பேசியதாவது:ஆன்மிகம் தழைக்க வேண்டும். மக்களிடம் இறை நம்பிக்கை வளர வேண்டும். எங்கும் வியாபித்துள்ள இறைவன், நம்முள் இருந்து, நமது செயலுக்கு தக்க விளைவுகளை வழங்கி வருகிறார் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்.இறைவன் என்றால் மதம் என்று அர்த்தம் அல்ல. மதம் என்பது வழிபாட்டு முறை மட்டுமே. இறைவனை சரணாகதி அடைந்து வழிபட்டால் மட்டுமே, வேண்டியது கிடைக்கும். வேண்டியதை கொடுத்தாலும், அறநெறி தவறாமல் வாழ வேண்டும்.
ஒழுக்கமும், கடமையை நேர்மையாக நிறைவேற்றும் பக்குவமும், உயர்ந்த நற்பண்பும் கொண்டதே, இறைவன் விரும்பும் அறவாழ்க்கை. அப்படியான அறவாழ்க்கையை, குழந்தை களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:அடியாருக்கு அடியாராக இருந்து, இறைநெறியை வளர்க்க வேண்டும். சமயப்பணியிலும், சமுதாயப்பணியிலும், நாங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், அடியார்கள் எங்களுடன் கரம் கோர்த்து வரவேண்டும்.
நமது பயணம், குறிக்கோளை அடையும் வகையில் இருக்க வேண்டும். கோவில் என்பது, அருளை வழங்கும் மையம் மட்டுமல்ல; வாழ்வில் பின்னி பிணைந்தவை. தமிழில் வழிபாடு நடத்துவது, மொழிவெறி ஊட்டுவதற்கு அல்ல; அனைவரும் எளிமையாக இறைவனை அணுகலாம் என்பதை உணர்த்துவதற்காக. அற்புதம் நிறைந்த திருமுறைகளை, இல்லங் களை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.
சமயநெறி பரப்பும், அருள்நெறி பயணத்தில், அன்பர்கள் அனைவரும் கரம் கோர்த்து எங்களுடன் வரவேண்டும். சமயம் என்பது எளிமையானது. அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். சமயம், கல்வி, மருத்துவம், அறப்பணிகளில், ஆதீனத்துடன் இணைந்து, கரம்கோர்த்து பணியாற்ற, அன்பர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார். திருப்பூர் முக்கிய பிரமுகர்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.