கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 6ம் தேதி திருமஞ்சனம் நடந்தது. 7ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
தினமும் காலை 7:00 மணிக்கு பெருமாள், உபயநாச்சியாருக்கு திருமஞ்சனமும், காலை 10:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்து வருகிறது.நேற்று (ஜூலை., 11ல்) காலை திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் வீதியுலா, ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு தங்க கருட சேவை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா, மேலாளர் ஆழ்வார், அர்ச்சகர் தேவநாதன் பட்டர், பத்ரி, சுந்தர் பட்டர்கள் செய்து வருகின்றனர்.