ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனித்திருவிழா ஜூலை 3ல் துவங்கியது. தினசரி காலை வேளைகளில் பல்லக்கு ஊர்வலம், இரவில் சிம்ம வாகனம், ஆஞ்சநேய வாகனம், கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனித்திருவிழாவை முன்னிட்டு தினமும் விஷேச பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூலை 9ல் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கோதண்டராம சுவாமி எழுந்தருளிய நிலையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளின் வழியாக வந்த தேரை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இன்று சிறப்பு பூஜைகளுடன் ஆனித்திருவிழா நிறைவடைகிறது.