பதிவு செய்த நாள்
14
ஜூலை
2019
12:07
தி.மலை: செங்கம் வேணுகோபால் பார்த்தசாரதி கோவிலில், இடி தாக்கியதில் கோபுரம் சேதமடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், ஆரணி, உள்ளிட்ட பகுதிகளில், பரவலாக மழை பெய்தது. செங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான, வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலை இடி தாக்கியது. அக்கோவிலின் ராஜகோபுரத்தில் தெற்கு பக்கமுள்ள, சிங்கமுகம் கொண்ட சிலை மற்றும் கோபுரத்தின் நான்கு சிலைகளுக்கு, கைகள், தலை போன்றவை, இடியால் உடைந்து சேதமாகின. நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், பலத்த மழை பெய்ததில், ஆரணியில், 24.6 மி.மீ., செங்கம், 46.6, சாத்தனூர் அணை, 13.6, வந்தவாசி, 16, போளூர், 98.4, திருவண்ணாமலை, 14.4., தண்டராம்பட்டு, 7, கலசப்பாக்கம், 65, சேத்துப்பட்டு, 37, கீழ்பென்னாததூர், 17.4 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.