ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை அன்னதான மடங்கள் மூடபட்டதால் நிலவும் உணவுப்பற்றாக்குறையால் ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமப்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க பக்தர்கள் தங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வருவதே நல்லது.
2015க்கு பின் சதுரகிரியில் மழையில்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாதம்தோறும் பவுர்ணமி அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் கோயிலுக்கு வரும் சில ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர் தருவதற்கே அறநிலையத்துறை தவித்து வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை 6 நாட்கள் வரும் பல லட்சம் பக்தர்களுக்கு தேவையான தண்ணீரை அறநிலையத்துறையால் வழங்க முடியாத நிலை உள்ளது.
தற்போது அறநிலையத்துறையால் தேக்கப்படும் தண்ணீர் மொட்டை போடும் பக்தர்களுக்கும் கழிப்பறைகளுக்கும் மட்டுமே பூர்த்தியாகும். குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் வழங்குவது சாத்தியமில்லாத நிலையே உள்ளது. மலையில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான மடங்கள் மூடபட்டதால் அறநிலையத்துறை வழங்கும் உணவோ கஞ்சியோ பக்தர்களின் பசியை போக்கும் விதத்தில் இருக்காது. இதுவரை 10 க்கு மேற்பட்ட இடங்களில் தனியார் அன்னதானம் வழங்கிய நிலையில் தற்போது அறநிலையத்துறை வழங்கும் அன்னதானத்தை பெறுவதில் மிகவும் சிரமங்கள் ஏற்படும். இதை தவிர்க்க பக்தர்கள் தங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வருவதே நல்லது. தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாலும் மலையில் சுற்றுசூழலை பாதுகாக்கவும் பக்தர்கள் இரவில் கோயிலில் தங்குவதை தவிர்க்கலாம்.