பதிவு செய்த நாள்
27
ஆக
2019
02:08
உடுமலை:விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பாரம்பரிய முறையில் மண்ணால் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்திவிழா, வரும் செப்.,2ல் நடக்கிறது. வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பதை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.பல அடி உயரத்திற்கு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயனம் கலந்த வண்ணங்கள் பூசுவதால், குளம், கால்வாய் என நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
சூழல் சிலைகள்: இதனால், சிலைகள் தயாரிப்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாவு, காகிதக்கூழ், இயற்கை வர்ணங்கள் கொண்டு பெரிய அளவிலான சிலைகள் செய்யப் படுகின்றன. அவை, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளா என கேள்வி எழுகிறது. ஆனால், வீடுகளில் இன்றளவும் பாரம்பரிய முறைப்படி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, களிமண்ணால் செய்யபட்ட சிலைகள் வைக்கப்படுகிறது. களி மண், மணல் மற்றும் புற்று மண் ஆகியவற்றை இணைத்து, நீரில் ஊற வைத்து மண் வடிகட்டி, நன்கு பிசைந்து பசைபோல் மாற்றப்படுகிறது. அதற்குப்பிறகு, பல்வேறு விநாயகர் வடிவங்களில் உள்ள அச்சுக்களில் வைத்து நன்கு, அழுத்தி சிலைகள் உருவாக்கப்படுகிறது. சில மணி நேரம் உலர்ந்ததும், சிலை விற்பனைக்கு தயாராகிறது. சிலை கரைப்பதால், சூளையில் வைத்து சுட வைப்பதில்லை. களி மண்ணால், அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் மட்டுமே சிலை தயாரிக்க முடியும். அரை அடி சிலை, இரண்டு கிலோ வரை காணப்படும். வடிவத்திற்கு ஏற்ப, மண் சிலைகள், 60 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை விற்கிறது.
மண்பாண்ட தொழிலாளி குப்புச்சாமி கூறியதாவது :கடந்த, 30 ஆண்டுக்கு முன் விநாயகர் சதுர்த்திக்கு, களி மண் சிலைகள் மட்டுமே விற்பனையாகும். ஒரு சிலர், தங்கம், வெள்ளி ஆபரணங்களை சிலையில் வைக்க வேண்டும், என்பதால் விநாயகர் சதுர்த்தியன்று காலை, செய்து தருமாறு கூறுவர். கூடுதல் வேலைபச்சை மண்ணில் செய்வதால் எளிதில் கரையும். மண்பாண்டம் தயாரிப்பதை விட, சிலை தயாரிக்க கூடுதல் வேலை உள்ளது; அச்சில் சரியாக வார்த்து எடுக்க வேண்டும். நாகரீக வளர்ச்சி காரணமாக, காகிதக்கூழ், மாவு ஆகியவற்றைக் கொண்டு, வண்ண சாயங்கள் பூசியும், குறைந்த எடையுள்ள சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இச்சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. இவ்வாறு, அவர் கூறினார்.இயற்கை வண்ணம் தயாரிப்புஇயற்கை சாயம் தயாரிப்பிலும், பாரம்பரிய முறை சிறந்ததாக இருந்துள்ளது.
மசன கல், கிணத்துக்கல் ஆகியவற்றை சூளையில், அதிக வெப்பத்தில் சுடும் போது, தங்க நிறத்திற்கு மாறுகிறது. அதனை, பொடியாக்கி, கரைத்து விநாயகர் சிலைக்கு பூசி வருகின் றனர். அதே போல், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் ஒரு சில செடிகளின் இலைகளிலும் வண்ணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் பழமை மாறி, தற்போது பல்வேறு நிற சாயங்கள் பூசப்படுகிறது. அதிலும், இயற்கையான வாட்டர் கலர் நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.