பதிவு செய்த நாள்
30
ஆக
2019
12:08
விநாயகர் முன் தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதால் உடல்ரீதியான பிரச்னை தீர்கிறது. அறிவு அபிவிருத்தி ஏற்படுகிறது என்று அறிவியல் ரீதியாக சொல்வார்கள். இதிலே இன்னொரு புதிய ஆன்மிக ரகசியமும் அடங்கியிருக்கிறது. நம் வீட்டுக்கு யாராவது ஒரு ஏழையோ, நடுத்தர வருமானம் உள்ளவரோ தன் குழந்தையுடன் வருகிறார். குழந்தை பொருட்களை இழுத்து விளையாடும் போது, அப்படி செய்யாதே என்று அதட்டி கட்டுப்படுத்தி விடுவோம். வந்தவர்களும் பிள்ளையை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். அதுவே பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையாக இருக்கட்டும். குழந்தையை அதட்ட முடியாது. அதட்டினால் குழந்தை கோபிக்கிறதோ, என்னவோ...பெரிய மனிதருக்கு கோபம் வந்து விடும். “இது என்ன உலகத்தில் இல்லாத பொருளா...இது உடைந்து போனால் நான் வேறு வாங்கி தந்து விட மாட்டேனா...” என்று பொரிந்து தள்ளி விடுவார். இதற்குப் பதிலாக, அந்தக் குழந்தையை பாராட்டி பேசி விட்டால் போதும். <
பிள்ளை சந்தோஷப்படுகிறதோ இல்லையோ...பெரிய மனிதர் சந்தோஷப்பட்டு, நாம் கேட்டதைக் கூட செய்து கொடுத்து விடுவார். இன்னும் ஒருபடி மேலாக, அந்தக் குழந்தைக்கு ஏதாவது கோணங்கித்தனமாக விளையாட்டு காட்டி சிரிக்க வைத்து விட்டால் போதும். பெரிய மனிதர் குஷியாகி, ஏதோ பெரிதாக செய்யவும் நினைப்பார். ஊருக்கு பெரிய மனிதர் நாட்டாமை, ஜில்லாவுக்கு பெரிய மனிதர் கலெக்டர், மாநிலத்துக்கு பெரிய மனிதர் முதல்வர்..உலகத்துக்கே பெரிய மனிதர் பரமேஸ்வரனும், அவர் மனைவி பரமேஸ்வரியும் தான். இவர்கள் மனம் மகிழ வேண்டுமானால், இவரது பிள்ளையை சந்தோஷப்படுத்த வேண்டும். எனவே அந்தக் குழந்தைக்கு பிடித்த மோதகம், கரும்பு, அவல், பொரி என கொடுப்பதுடன், அவர் முன்னால் நின்று காதுகளை மாற்றிப் பிடித்து, தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டினால் பிள்ளை மகிழும். அதைப் பார்த்து பெற்றவர்கள் மகிழ்வார்கள். நாம் கேட்ட வரம் கிடைக்கும். இவ்வளவு விஷயம் இருக்கிறது ஒரு தோப்புக்கரணத்தில்...!
. முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்: தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.