மானாமதுரை:மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற வழிவிடுமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி 6 மாதங்களாக கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. செப்., 6ம் தேதி விக்னேஸ்வர, யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, வேள்விகள் நடைபெற்றது. நேற்று காலை 10:15 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் எடுத்து வரும் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து வழிவிடுமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அரோகரா... கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.